காங். இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா- வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை!
டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்க் உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது. சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வரும் சோனியாவின் உடல்நலன் தேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுர்ஜிவாலா ட்வீட்
இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது சோனியா காந்தி குணமடைந்து வருகிறார் என பதிவிட்டுள்ளார் ரந்தீப் சுர்ஜிவாலா.

நேஷனல் ஹெரால்டு
இதனிடையே நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 8-ந் தேதி சோனியா காந்தி ஆஜராக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.நாடு விடுதலைக்கு முன்னர் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம், ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகி வந்தது. இப்பத்திரிகை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ90 கோடி கடன் கொடுத்தது. ஆனாலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.

சோனியாவுக்கு சம்மன்
பின் 2010-ல் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா, ராகுல் வசம் உள்ளன. இந்த பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

வெளிநாட்டில் ராகுல்
இவ்வழக்கில் சோனியா, ராகுல் காந்தி ஜூன் 8-ந் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் சோனியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருப்பதால் அமலாக்கப் பிரிவு முன்பாக ஆஜரக அவகாசம் கேட்டுள்ளார் ராகுல் காந்தி.

பிரதமர் மோடி வாழ்த்து
இதனிடையே சோனியா காந்தி விரைவில் நலம் பெற வேண்டும் என பிரதமர் மோடி தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி ஜி விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications