ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள்- 58 ஆண்டு தடை நீக்கம்-மத்திய பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
டெல்லி: இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் இணைய விதிக்கப்பட்டிருந்த 58 ஆண்டுகால தடையை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நீக்கியிருப்பதாக கூறப்படுவது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரலாம், ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் என்ற மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாடு விடுதலை அடைந்த போது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு காரணமாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1948-ல் தடை செய்யப்பட்டது. பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீதான தடை நீக்கப்பட்டது.

1966-ல் பசுவதைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக டெல்லியில் பெரும் வன்முறை வெடித்தது. டெல்லியில் நாடாளுமன்றைத் தாக்கவும் ஒரு கும்பல் முயற்சித்தது. மற்றொரு கும்பல் டெல்லியில் பெருந்தலைவர் காமராஜர் தங்கி இருந்த இல்லத்துக்கு தீ வைத்து அவரை உயிரோடு எரித்து படுகொலை செய்யவும் முயற்சித்தது. இந்த கொலை முயற்சியில் இருந்து பெருந்தலைவர் காமராஜர் உயிர் தப்பினார்.
இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேரவும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தடை விதித்தார். இந்த தடை அமலில் தொடர்ந்து இருந்து வந்தது. மத்தியில் பாஜக ஆட்சிகள் அமைந்த போதும் கூட இந்த தடை நீக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக கூட்டணி, அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைய, நிகழ்ச்சிகளில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருக்கிறது. இதற்குதான் தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியதாவது: இது மிகவும் ஆபத்தானது. ஆர்.எஸ்.எஸ். என்பது வேறு அரசு பணி என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளாக மோடி ஆட்சி இந்த தடையை நீக்கவில்லை. இப்போது இந்த தடையை நீக்க வேண்டிய அவசியம் என்ன? அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் எந்த ஒரு இயக்கத்திலும் சேரலாம். தற்போது அரசு ஊழியராக இருப்பவர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும்.
மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி: மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின்னர் நேரு அரசாங்கத்தால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தை மதிப்பதாகவும் இந்திய தேசியக் கொடியை மதிப்பதாகவும் உறுதி மொழி அளித்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை பின்னர் நீக்கப்பட்டது. அத்துடன் அரசியலில் ஈடுபடக் கூடாது எனவும் அப்போது ஆர்.எஸ்.எஸ்-க்கு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேரலாம் என்கிறது. இது மிகவும் தவறானது.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்: இத்தகைய அனுமதியானது அதிகாரிகளின் நடுநிலைமையை கேள்விக்குள்ளாக்கிவிடும். அரசு ஊழியராக இருப்பவர் எந்த ஒரு அரசியல் இயக்கத்தின் உறுப்பினராகவும் இருக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஏன் என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்.
திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்: மத்திய அரசு அலுவலர்கள் இணைவதற்குத் தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்கள் / அமைப்புகள் பட்டியலிலிருந்து, RSS அமைப்பு (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) நீக்கப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணமாகும். ஏற்கனவே, கல்வி நிலையங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் போன்றவை காவிமயமாக்கப்படும் சூழ்நிலையில், அரசுத் துறைகளையும் காவிமயப்படுத்தும் இம்முயற்சி கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications