ஊழல்தான் காங்கிரஸின் மூச்சு காற்று;மிகப் பெரிய சித்தாந்தம்-சத்தீஸ்கர் கூட்டத்தில் பிரதமர் மோடி சாடல்
டெல்லி: ஊழல் கறைபடிந்த கட்சிகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைத்து வருகிறது; காங்கிரஸின் மூச்சு காற்றே ஊழல்தான் என சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.
சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்கள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளன. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன.

தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி- பிஆர்எஸ் ஆட்சியில் இருக்கிறது; சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் கால அதிசயம் நிகழ்ந்தால்தான் பாஜகவின் நிலையில் மாற்றம் ஏற்படும். ஆனால் சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ்- பாஜக இடையேதான் நேரடி போட்டி. இரு மாநிலங்களிலும் எப்படியாவது ஆட்சியை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக முனைப்பாகவும் உள்ளது. பாஜகவுக்கு நம்பிக்கை தரும் வகையில் இரு மாநில ஆளும் காங்கிரஸில் உட்கட்சி மோதலும் அமோகமாக விளைச்சலைத் தந்து கொண்டிருக்கிறது. ஆகையால் பாஜகவுக்கு அறுவடை எளிது என்பது கணக்கு.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு இன்று சென்ற பிரதமர் மோடி ராய்ப்பூர்- விசாகப்பட்டினம் ஆறு வழிச்சாலை உட்பட 5 நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ7,500 கோடி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இப்பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஊழல் கறைபடிந்த கட்சிகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி ஒன்று சேர்த்து கொண்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் அழிக்க பயன்படுத்திக் கொண்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். ஊழல் செய்கிறவர்களே! உங்கள் காதுகளை திறந்து வைத்து கொள்ளுங்கள்.. காங்கிரஸ் ஊழல் செய்யத்தான் வாக்குறுதி தரும். ஆனால் மோடி, ஊழல் செய்தவர்களை தண்டிக்கத்தான் வாக்குறுதி தரும். காங்கிரஸ் கட்சி என்பது ஊழல் கட்சியாகும். ஊழல் இல்லாமல் காங்கிரஸால் மூச்சுகூட விட முடியாது. ஊழல்தான் காங்கிரஸின் மிகப் பெரிய சித்தாந்தம்.
சத்தீஸ்கர் மாநிலத்தை ஏடிஎம் மெஷின் போல பயன்படுத்துகிறது காங்கிரஸ். அவ்வளவு ஊழல். சத்தீஸ்கர் மாநிலத்தையே காங்கிரஸ் சூறையாடி உங்கள் உரிமைகளை பறித்துவிட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்கியதில் பாஜகவின் பங்கு மிக முக்கியமானது. சத்தீஸ்கர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட கட்சி பாஜக. அதனால்தான் இன்று ரூ7,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
சத்தீஸ்கர் பயணத்தை முடித்து கொண்டு உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு 3 வந்தேபாரத் ரயில் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் வாரணாசி நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இப்பயணங்களைத் தொடர்ந்து நாளை தெலுங்கானா மாநிலம் வாரங்கல் செல்கிறார் பிரதமர் மோடி. நாக்பூர்- விஜயவாடா நெடுஞ்சாலை பணி தொடக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார். பின்னர் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் சென்று பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications