பிரியங்கா வந்தாச்சு! முதல்ல உ.பி.. அப்புறம் ஆந்திரா, மேற்கு வங்கம்.. தனித்தே களமிறங்க காங். பிளான்
Recommended Video
டெல்லி:காங்கிரசின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப் பட்டதால் கட்சியில் எழுந்துள்ள உத்வேகத்தை கண்ட ராகுல், சோனியா உள்ளிட்டோர், ஆந்திரா, மேற்கு வங்கத்திலும் தனித்தே லோக்சபா தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.
லோக்சபா 2019ம் ஆண்டு தேர்தல் களத்தில் அதிரடி அரசியல் திருப்பங்கள் ஏற்படும் காலங்கள் தொடங்கி விட்டன. பிரிகேட் மைதானத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி முழங்கியது, பாஜகவின் அரசியல் காய் நகர்த்தலை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு போகவைத்துவிட்டது.
ஒவ்வொரு மாநிலங்களில் யாருக்கு எத்தனை சீட்டுகளில் வெற்றி கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்புகள் பாஜகவை பலமாக யோசிக்க வைத்துவிட்டது. காங்கிரசுக்கு வளர்ச்சி மீண்டும் ஆரம்பித்துவிட்டதோ என்று பாஜக மேலிடம் சிந்தித்து, வெற்றிக்கான உத்திகளையும், வியூகங்களையும் மாற்றும் முடிவுக்கு வந்துள்ளது.
பொதுச்செயலாளர் அறிவிப்பு
காங்கிரசும், தமது அடுத்த இன்னிங்சை ஆரம்பிக்கும் வகையில் உத்தரப் பிரதேசத்தில் இளம் இந்திரா காந்தி என்று அக்கட்சியின் தலைவர்கள் கருதும் பிரியங்கா காந்தியை பொதுச்செயலாளராக்கி அனுப்பி வைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி என்று காங்கிரஸ் அறிவித்த உடனேயே ஏதோ திட்டம் உள்ளதை உணர்ந்த பாஜக.... இது காங்கிரசின் தோல்வியை காட்டுவதாகவே விமர்சித்தது.
தனித்தே களமிறங்க முடிவு
அது என்ன என்பது கொஞ்சம், கொஞ்சமாக தெரிய வர ஆரம்பித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். நாட்டில் உள்ள முக்கியமான அனைத்து மாநிலங்களிலும் தனித்தே லோக்சபா தேர்தலை சந்திக்கலாம் என்றும்... அதற்காக நிதானமாக... அதே சமயத்தில் வலுவான போட்டியை உருவாக்கலாம் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் கணித்துள்ளனர்.
திட்டமிடும் காங்கிரஸ்
அதன் முதல்படி.. உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே களம் காண்பது. அதனை தொடர்ந்து... மற்ற மாநிலங்களிலும் படிப்படியாக தனித்தே போட்டி என்ற முடிவை செயல்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.தற்போதையை நிலையில்.. அரசியலில் கால் பதித்த பிரியங்காவின் வரவு தேசிய அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனை சரியாக அறுவடை செய்யும் வகையில்.... ங்கிரஸ், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தனித்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேசிஆர் மாஸ்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்துத்தான் அண்மையில் தெலுங்கானா தேர்தலை காங்கிரஸ், எதிர் கொண்டது. ஆனால் இருவரின் கனவுகளை தனித்தே நின்று தவிடு பொடியாக்கினார் சந்திரசேகர் ராவ். அவரது தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற, 2 வது முறையாக முதல்வரானார் கேசிஆர்.
தனித்து போட்டி
தேர்தல் முடிவு, காங்கிரஸ்,தெலுங்கு தேசம் இடையில் மோதல் போக்கை அதிகரித்தது. இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் இருவரும் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதனின் முன்னோட்டம் தான் மேற்கு வங்க எதிர்க்கட்சிகள் மாநாட்டில் காங்கிரசின் பங்களிப்பு.
தவிர்த்த காங்கிரஸ்
சமீபத்தில் பிரதான எதிர்கட்சிகள் பலவும் மம்தா தலைமையிலான பேரணியில் கலந்து கொண்டன. அதற்கு ராகுல் காந்தி ஆதரவு மட்டும் தெரிவித்து, வருவதை தவிர்த்தார். இந்நிலையில் அங்கும் காங்கிரஸ் தனித்து களம் காண்பதுதான் சரியானதாக இருக்கும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதை சமாளிக்கும் வகையில், தேர்தலை தனியாக சந்திக்க தயாராகி வருவதாக தெரிகிறது.
கூட்டணியும் உண்டு
மற்ற முக்கிய மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் டெல்லியை பொறுத்தவரை, ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஏன் என்றால், இந்த 2 கட்சிகளும் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்பதே அதன் சமிக்ஞை என்று அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
சீரியசாக பார்க்கும் பாஜக
தமிழகத்தில் திமுக, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் காங்கிரஸ் களம் காணும். கர்நாடகாவில் மதச் சார்பற்ற ஜனதா தளம், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்க்கண்டில் ஜே.எம்.எம் ஆகிய கட்சிகளுடன் லோக்சபா தேர்தலை சந்திக்கும் என்று தெரிகிறது. ஆக மொத்தத்தில் லோக்சபா தேர்தலை ஆக்ரோஷமாக எதிர் கொள்வோம் என்று ராகுல் காந்தி கூறியதை பாஜக சீரியசாக பார்க்க வேண்டும் என்பது மட்டும் புரிகிறது.