சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் ராஜினாமா? தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கும் தலைவர்கள்? பரபர தகவல்
டெல்லி: 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், நாளை நடைபெறும் காரிய கமிட்டி கூட்டம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ், கோவாவில் 12 இடங்களில் மட்டுமே வென்றது.
பிரியங்கா காந்தி மிகத் தீவிரமாகப் பிரசாரம் செய்த உத்தரப் பிரதேசத்தில் வெறும் 2 இடத்தில் மட்டுமே வென்றது. உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களிலும் கூட காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை.

ஜி23 தலைவர்கள்
குறிப்பாக, 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியும் குறைந்துள்ளது. இந்த தோல்வி காங்கிரஸ் தலைமை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. இந்தத் தோல்விகள் குறித்து நேற்றைய தினம் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களாக அறியப்படும் ஜி23 தலைவர்கள் டெல்லியில் உள்ள குலாம் நபி ஆசாத் வீட்டில் ஆலோசனை நடத்தினர். கட்சித் தலைமையில் சீர்திருத்தம் தேவை என்றும் கட்சியில் இனியும் மாற்றத்தைத் தவிர்க்க முடியாது என்றும் திருவனந்தபுரம் எம்பியும் அதிருப்தி தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் தெரிவித்திருந்தார்.

காரிய கமிட்டி கூட்டம்
இந்தச் சூழலில், தேர்தல் தோல்விகள் குறித்து ஆலோசிக்க நாளைய தினம் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப சிதம்பரம், மல்லிகார்ஜூன கார்கே உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்விகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ராஜினாமா
இதற்கிடையே 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பொறுப்பேற்று சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பதவி விலக உள்ளதாகத் தகவல் வெளியானது. கடந்த 2019 மக்களவை தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி பதவி விலகி இருந்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக இரண்டு ஆண்டுகளாகச் சோனியா காந்தி இருந்து வருகிறார். அதேபோல காங்கிரஸ் பொதுச்செயலாளராகப் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் மூவரும் பதவி விலக உள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுப்பு
இந்நிலையில் இந்தச் செய்தி குறித்து காங்கிரஸ் கட்சி உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. அதாவது நாளைய கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ளது இது தொடர்பாக அக்கட்சியின் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியாகி உள்ள செய்தி முற்றிலும் தவறானது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications