பிரசாந்த் கிஷோர் யோசனை- கட்டமைப்பை அடியோடு மாற்றும் காங்.- தேசிய அளவில் துணை, செயல் தலைவர்கள் பதவி!
டெல்லி: தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடம் கட்சி கட்டமைப்பை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளது. மேலும் தேசிய அளவில் செயல் தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவிகளை உருவாக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக, பா.ஜ.க) எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி சிதறு தேங்காய் போல் படுபலவீனமாகத்தான் இருக்கிறது.
1 கோடி தடுப்பூசி.. ஆகஸ்ட் மாதம் கர்நாடகா வரும்.. ஹேப்பியாக அமைந்த முதல்வரின் முதல் டெல்லி பயணம்
2019 லோக்சபா தேர்தலில் வெறும் 52 இடங்களில்தான் காங்கிரஸ் கட்சியால் பெற முடிந்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இப்போது வரை காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை. இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி, அவருக்கு ஆலோசனை தர குழு என காலத்தை தள்ளுகிறது காங்கிரஸ்.
பல மாநிலங்களில் மோதல்
அத்துடன் காங்கிரஸ் பலமாக இருக்கின்ற மாநிலங்களில் கட்சியில் செங்குத்து பிளவு ஏற்படும் வகையில் கோஷ்டி பூசல்கள் உச்சகட்டமாக இருக்கின்றன. இதனை சரி செய்வதற்குள் பெரும்பாடாகிவிடுகிறது காங்கிரஸ் மேலிடத்துக்கு. பஞ்சாப் மாநிலத்தில் ஆண்டுக் கணக்கில் நீடித்த உட்கட்சி மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ராஜஸ்தானில் இன்னமும் இடியாப்பக்க சிக்கல்தான்.. தீர்ந்தபாடில்லை. இப்படி அத்தனை திசைகளிலும் தத்தளித்து தடுமாறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுப்பவராக நுழைந்திருக்கிறார் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் (பி.கே).
தேர்தல்களில் பி.கே.
அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பிரசாந்த் கிஷோரின் வியூகம் ஒர்க் அவுட் ஆனது. தமிழகத்தில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை கைப்பற்றியதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் வியூகம் உள்ளது. அதேபோல் மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற துடித்த பாஜகவை 77 இடங்களுக்குள் முடக்கி மமதா பானர்ஜியை 3-வது முறையாக அரியானசத்தில் அமர்த்தியதிலும் பிரசாந்த் கிஷோரின் பங்கு முக்கியமானது.
சரத்பவார்- பி.கே.
சட்டசபை தேர்தல்களுடன் ஒட்டுமொத்த தேர்தல் வியூக பணியையே நிறுத்திக் கொள்வதாக பிரசாத் கிஷோர் அறிவித்திருந்தார். ஆனால் திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை 2 முறை அவர் சந்தித்து பேசியதால் தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சந்திப்புகளுக்குப் பின்னர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை சரத்பவார் டெல்லியில் கூட்டினார். இது லோக்சபா தேர்தலுக்கான 3-வது அணி என்றெல்லாம் கூறப்ப்பட்டது. ஆனால் காங்கிரஸ் பங்களிப்புடனேயே எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்பதில் சரத்பவார் திட்டவட்டமாக இருந்தார்.
டெல்லியில் மமதா
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் இணைந்த வலிமையான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு மமதா பானர்ஜி முயற்சித்து வருகிறார். அண்மையில் டெல்லியில் 5 நாட்கள் முகாமிட்டிருந்த மமதா பானர்ஜி இதற்கான முன்நகர்வுகளை மேற்கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் அத்தனையும் முழுவீச்சில் கை கோர்த்துவிட்டால் 6 மாதங்களில் தற்போதைய நிலவரம் தலைகீழாக மாறும் என பேட்டி கொடுத்து பாஜகவுக்கு பீதியை கொடுத்தார் மமதா பானர்ஜி.
காங்கிரஸில் பி.கே.?
இந்த பின்னணியில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அண்மையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியிருந்தார். அவர் ஏற்கனவே நிதிஷ்குமாரின் ஜேடியூவில் இருந்து பின்னர் விலகினார். காங்கிரஸில் பி.கே. இணைவதை உறுதி செய்யும் விதமாக ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான அர்ச்சனா டால்மியா கடந்த வெள்ளிக்கிழமையன்று ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் பி.கே.வை காங்கிரஸ் வரவேற்கிறது என பதிவிட்டிருந்தார். பின்னர் இந்த பதிவு நீக்கப்பட்டது.
மறுசீரமைப்பு அஜெண்டா
மேலும் பி.கே.வை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, கே.சி. வேணுகோபால், அம்பிகா சோனி உள்ளிட்டோருடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். அனேகமாக ஓரிரு வாரங்களில் பிரசாந்த் கிஷோர் அதிகாரப்பூர்வமாகவே காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள். அப்படி பி.கே. கட்சியில் இணைவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியை எப்படி மறுசீரமைக்க வேண்டும் என்கிற அஜெண்டாவையும் கொடுத்திருக்கிறாராம் டெல்லி மேலிடத்தில்.
காங்கிரஸுக்கு புதுரத்தம்
அதன்படி ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியில் மேல் இருந்து கீழ் மட்டம் வரை மிகப் பெரிய மாற்றங்களை செய்தாக வேண்டும். இப்போதைய காங்கிரஸ் கட்டமைப்பு இனி பயன்தரப் போவது இல்லை என்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்படுகிறதாம். தேசிய அளவில் துணைத் தலைவர்கள், செயல் தலைவர்கள் பதவிகள் உருவாக்கப்பட உள்ளதாம். கீழ்மட்டங்களில் கோஷ்டி பூசல்களுக்கு இடம் கொடுக்காத வகையில் புதிய பதவிகள் உருவாக்கப்படுகிறதாம். அதாவது காங்கிரஸ் கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சும் பணியைத்தான் பி.கே. கையில் எடுத்திருக்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
புதிய தலைவர் யார்?
இந்த மறுசீரமைப்புகளுக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்து அறிவிக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் காந்திதான் முன்மொழியப்பட்டுக் கொண்டிருக்கிறார். பொதுவாக நேரு குடும்பத்தினரே காங்கிரஸ் கட்சிக்கு தலைவர்களாக இருக்கின்றனர். இந்த பாரம்பரியத்திலும் மாற்றங்களை கொண்டு வந்து பாஜகவுக்கு அத்தனை வகைகளிலும் கவுண்ட்டர் அட்டாக் கொடுக்கக் கூடிய ஒருவரை தலைவராக்கலாம் என்கின்ற ஆலோசனைகளும் டெல்லியில் பரபரவென நடக்கின்றனவாம். லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இத்தனை மாற்றங்களையும் எவ்வளவு வேகமாக செயல்படுத்த முடியுமோ? அத்தனை வேகமாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிப்பவராக இப்போது பி.கே. எனும் பிரசாந்த் கிஷோர் முன்நிற்கிறார்!