சேட்டைக்கார சித்து மீது டெல்லி மேலிடம் செம காண்டு... முகம் சுளிக்கும் பஞ்சாப் அரசியல் களம்!
டெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரஸில் பஞ்சாயத்துக்கு மேல் பஞ்சாயத்தை இழுத்துவிட்டு வரும் நவ்ஜோத்சிங் சித்து மீது காங்கிரஸ் மேலிடம் கடும் கோபத்தில் இருக்கிறதாம். இதனால் புதிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நியமனம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது டெல்லி மேலிடம்.
பஞ்சாப் மாநிலத்தில் கொஞ்சம் செல்வாக்குடன் ஆட்சியில் இருக்கிறது காங்கிரஸ். முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் அமைதியாகத்தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார்.

தனிக் கட்சியா?
பஞ்சாப் காங்கிரஸில் மாஜி கிரிக்கெட் வீரரான நவ்ஜோத்சிங் சித்து தலையெடுத்த பின்னர் அந்த கட்சிக்கு கேடு காலம்தான் போல... முதல்வர் அமரீந்தர் சிங் பதவியை பறிக்க வைத்துவிட்டார் சித்து. இதனால் வெறுத்துப் போன அமரீந்தர்சிங் காங்கிரஸுக்கு முழுக்கு போட்டுவிட்டு தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

ராஜினாமா செய்த சித்து
அமரீந்தர்சிங் போன பின்னரும் அடங்காமல்தான் இருக்கிறார் சித்து. புதிய முதல்வர் சரண்ஜித் சிங் அரசாங்கத்திலும் சித்து தலையிட்டுக் குடைச்சல் தந்து வருகிறார். இந்த குடைச்சலின் உச்சமாக என் பேச்சை கேட்டு அரசாங்கத்தை நடத்துங்க.. அப்படி மறுக்கிறீங்களா.. நான் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்றேன் என சிறு பிள்ளைத்தனமாக அரசியலில் விளையாடிக் கொண்டிருக்கிறார் சித்து.
Recommended Video

கடுப்பில் டெல்லி
சித்துவின் இந்த போக்கை டெல்லி மேலிடம் கடும் கோபத்துடன் பார்த்து கொண்டிருக்கிறது. மேலும் சண்டிகருக்கு மேலிடப் பார்வையாளர் ஹரீஷ் சவுத்ரியையும் அனுப்பியது காங்கிரஸ். ஆனால் அவர் சித்துவை சந்திக்காமல் எம்.எல்.ஏக்கள் சிலரை சந்தித்து புதிய தலைவர் நியமனம் குறித்து ஆலோசித்திருக்கிறார். டெல்லியைப் பொறுத்தவரை நீங்களே பேசித் தீர்த்து கொள்ளுங்க என்பதாக நிலைப்பாடு எடுத்துவிட்டது. இதனால் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார் சித்து.

ஆர்.எஸ்.எஸ். அனுப்பி இருக்குமோ?
இதனிடையே சித்துவின் இந்த நிலையற்ற அரசியல் நிலைப்பாட்டை பஞ்சாப் அரசியல்வாதிகளும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ரசிக்கவில்லை. ஒருவேளை சித்துவை ஆர்.எஸ்.எஸ்.தான் அனுப்பி காங்கிரஸை சிதறவைக்கிறதோ என்று காங்கிரஸ் தலைவர்களே சந்தேகிக்கின்றனர். மேலும் பிறர் அமைதியாக மகிழ்ச்சியாக இருந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவராக சித்து வெளிப்படுகிறார் என்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள். பிரகாஷ் சிங் பாதல், அமரீந்தர்சிங் போன்ற மாஜி முதல்வர்கள் அரசாங்கத்தை அமைதியாக நடத்தினர்; ஆனால் சித்து போன்றவர்களால் எப்போதும் சலசலப்புதான் பஞ்சாப் அரசியலில் எனவும் அவர்கள் முகம் சுளிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications