பேரதிர்ச்சி! "ரூ971 கோடி" புதிய நாடாளுமன்றத்துக்குள் கொட்டும் மழை நீர்! பக்கெட்டில் பிடிக்கும் அவலம்!
டெல்லி: டெல்லியில் நேற்று பெய்த கனமழையால் நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளும் வெள்ளம் பாய்ந்தோடியது. அத்துடன் நாடாளுமன்றத்தின் லாபி பகுதியின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்து கொண்டிருப்பதால் வாளியை வைத்து மழை நீரை பிடித்துக் கொண்டிருக்கின்றனர் ஊழியர்கள். புதிய நாடாளுமன்ற வளாகம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவசரம் கருதி உடனடியாக இந்த கட்டிடத்தை ஆய்வு நடத்துவது தொடர்பாக லோக்சபாவில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. டெல்லியில் சில நாட்களுக்கு முன்னர் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைத்தளத்தில் மழை வெள்ளம் பாய்ந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதேபோல உத்தரப்பிரதேசத்திலும் கனமழை கொட்டியது. அம்மாநில சட்டசபைக்குள்ளேயே வெள்ளம் பாய்ந்தோடியது. இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. இதில் 28 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை.

டெல்லியில் நேற்று மாலை 1 மணிநேரத்துக்கும் மேல் கனமழை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது. 1 மணிநேரத்தில் சுமார் 112.5 மிமீ மழை கொட்டியது. பொதுவாக மேக வெடிப்பு ஏற்பட்டால்தான் இப்படி 1 மணிநேரத்தில் 11 செமீ மழைக்கு வாய்ப்பு அதிகம். ஆனால் இமாச்சலப் பிரதேசத்தைப் போல டெல்லியில் மேக வெடிப்பு ஏற்பட்டதா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
இதனிடையே டெல்லியில் நேற்று பெய்த கனமழையால் நாடாளுமன்ற வளாகமும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு செல்லும் சாலைகளும் நாடாளுமன்ற வளாகத்தின் உள்பகுதியிலும் மழை வெள்ளம் சூழ்ந்திருந்திருந்தது.

அத்துடன் நாடாளுமன்றத்தின் உள்ளே, லாபி பகுதியின் மேற்கூரையில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் லாபியின் மேற்கூரையில் மழைநீர் கசிந்து கொண்டிருந்ததை பக்கெட் வைத்து பிடித்து ஊழியர்கள் வெளியே கொட்டி வந்தனர். இந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதனிடையே புதிய நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிந்து கொண்டிருப்பதால் இந்த கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு நடத்த வேண்டும்; இது தொடர்பாக லோக்சபாவில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு ஓராண்டுக்குள்ளேயே லாபி பகுதியின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கொட்டுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தமது எக்ஸ் பக்கத்தில், வினாத்தாள் கசிவு வெளியே.
மழைநீர் கசிவு உள்ளே.
நேற்றைய மழையின் போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குடியரசுத் தலைவர் வரும் பிரதான வாயிலின் வழியே மழைநீர் வந்து கொண்டிருந்தது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications