100-க்கு 99 இல்லை.. 543 க்கு தான் 99-ல் ஜெயிச்சிருக்கீங்க.. காங்கிரசை கிண்டல் செய்த பிரதமர் மோடி
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக சாடிய நிலையில், பிரதமர் மோடி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி வருகிறார். வாக்கு வங்கிக்காக நாட்டை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்துவதாகவும் கூறினார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார். பிரதமர் மோடி பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசுமாறு எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் பிரதமர் மோடி சில நிமிடங்கள் தனது பேச்சை நிறுத்திய நிலையில், பின்னர் எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே தொடர்ந்து மோடி பேசினார்.

அப்போது பிரதமர் மோடி, தொடர்ச்சியாக 3-வது முறையாகவும் காங்கிரஸ் கட்சி 100 இடங்களை கூட வெல்லவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று விட்டு 100-க்கு 99 என்பது போல பேசுகிறது என்றும் மோடி கிண்டல் செய்தார். லோக்சபாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இனிவரும் சட்ட சபை தேர்தலில் பாஜகவே வெல்லும். இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்பதே மக்களின் தீர்ப்பு. தொடர்ச்சியாக 3-வது முறையாக காங்கிரஸ் கட்சி 100 இடங்களை கூட வெல்லவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளது. கேரளாவிலும் பாஜக கணக்கை தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சியாக அமரவே காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
பாஜகவை தோற்கடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. தேர்தல்களில் தோல்வி அடைவதில் காங்கிரஸ் கட்சி உலக சாதனை படைத்துவிட்டது. கடந்த 10 தேர்தலில் ஒரு முறை கூட காங்கிரஸ் கட்சி 250 தொகுதிகளை வெல்ல முடியவிலை. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று விட்டு 100-க்கு 99 என்பது போல பேசுகிறது. 543 தொகுதிகளில் தான் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்றது. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications