நாடாளுமன்றத்தில் கௌதம் அதானி விவகாரம்.. காங்கிரஸ் கட்சி எம்பி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மற்ற விவாதங்களை ஒத்திவைத்துவிட்டு அமெரிக்கா குற்றம்சாட்டிய கௌதம் அதானி விவகாரத்தை விவாதிக்க கோரி விருதுநகர் தொகுதியின் எம்பியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளார். இதேபோல் ராஜ்யசபாவில் அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று கோரி, காங்கிரஸ் எம்பி ரன்தீப் சிங் சுர்ஜிவாலா நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான கௌதம் அதானி, தனது சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்தியாவில் ஆந்திரா உள்பட மாநில அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 200 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருக்கிறது. மேலும் இதனை மறைத்து அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகளை பெற்றுள்ளதாகவும், இது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானது என்றும் கூறி நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதானிக்கு சம்மனும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அதானி முறைகேடு விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்து. இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. இந்த பரபரப்பான சூழலில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அவைகள் கூடியதுமே அதானி முறைகேடு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கோஷமிட்டனர் இதன் காரணமாக அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. நேற்றுமே இந்த விவகாரம் எதிரொலித்தது.
இதுபற்றி காங்கிரஸ் எம்.பி.யும், மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான பிரமோத் திவாரி கூறும் போது, 'அதானி குழுமத்துக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கேட்டுக்கொண்டன. அதானிக்கு எதிராகத்தான் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆனால் பா.ஜனதாதான் அஞ்சுகிறது என்று ஆவேசமாக தெரிவித்தார்.
மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யான கே.சி.வேணுகோபால் கூறும் போது, அதானி பிரச்சினையை விவாதிக்க பாஜக அரசு மிகவும் அஞ்சுகிறது. ஒரு விநாடியில் அவையை ஒத்திவைத்தனர். இதன் மூலம் இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஒரு வார்த்தையை கூட கேட்க அவர்கள் தயாராக இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
இதனிடையே தமிழ்நாட்டின் விருதுநகர் தொகுதி எம்பியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். அதில் கௌதம்அதானி மீதான அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரினார்.
இதுபற்றி மாணிக்கம் தாகூர் கூறுகையில், "இந்த விஷயத்தில் மோடி அரசின் மௌனம் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் உலகளாவிய நிலைகளை பற்றிய கவலையை எழுப்பி இருக்கிறது. அதானி உடனான நட்பு தொடர்பான கேள்விகளுக்கு பிரதமர் மோடி நிச்சயம் பதிலளிக்க வேண்டும். மேலும், ஆந்திரா அரசு எஸ்இசிஐ உடனான சூரிய சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதானி ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு 1,750 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விவாதித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நான் கோருகிறேன்" என்றார்.
இதேபோல் ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கௌதம் அதானி விவகாரத்தை விவாதிக்க கோரி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளார். ராஜ்யசபாவில் 267 விதியின் கீழ் கௌதம் அதானி மீதான குற்றப்பத்திரிகை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications