சீட்டுகளில் ரொம்பவே சீண்டும் "இந்தியா" கூட்டணி கட்சிகள்"- டெல்லி காங். முன்வைக்கும் தடாலடி பார்முலா!
டெல்லி: "இந்தியா" கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் அதீதமாக உதாசீனப்படுத்துவதால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கறார் பார்முலா ஒன்றை டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் உருவாக்கி இருக்கிறதாம் காங்கிரஸ்.
"இந்தியா" கூட்டணியில் நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் மணிப்பூர் முதல் மும்பை வரையிலான ராகுல் காந்தியின் பேருந்து யாத்திரையை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பாரத் நியாய யாத்திரை என்பது பாரத் ஜோடோ நியாய யாத்திரை என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் "இந்தியா" கூட்டணி கட்சிகள் சொற்பமான லோக்சபா தொகுதிகளையே ஒதுக்குவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குமுறலைக் கொட்டித் தீர்த்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் வெறும் 2 சீட் தான் தர முடியும் என மமதா பானர்ஜி தெரிவித்திருப்பது எல்லாம் ரொம்பவே சீண்டிப் பார்ப்பதாக இருக்கிறது எனவும் அம்மாநில தலைவர்கள் கொந்தளித்திருக்கின்றனர்.
இதனையடுத்து ஒவ்வொரு மாநிலத்துக்குமான உத்தேச தொகுதிப் பங்கீடு ஒன்றை டெல்லி காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டதாம். பீகாரில் "இந்தியா" கூட்டணியில் 25 தொகுதிகளில் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என முடிவு செய்திருக்கிறதாம் காங்கிரஸ். அதே நேரத்தில் பீகாரில் ஆர்ஜேடி, ஜேடியூ, இடதுசாரிகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது உறுதியானால் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 10 முதல் 12 தொகுதிகளைப் பெற்றாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 12 இடங்களில் காங்கிரஸ்; 2 இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போட்டியிடும் என்கிறது அம்மாநில பார்முலா. மேற்கு வங்கத்தில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளையாவது கொடுத்தால்தான் திரிணாமுல் காங்கிரஸுடனான கூட்டணியில் இருக்க முடியும் என முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
தமிழ்நாட்டில் 15 தொகுதிகளில் தொடங்கி 10 தொகுதிகளில் நிற்பது என திட்டமிட்டுள்ளதாம் காங்கிரஸ். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெல்வது உறுதி என்பதால் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படும் நிலையில் அப்போதைய சூழ்நிலை அடிப்படையில் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் காத்திருக்கவும் தீர்மானித்துள்ளனராம். அத்தனை மாநிலங்களிலும் ஜனவரி 3-வது வாரத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும் எனவும் டெல்லி ஆலோசனைக் கூட்டம் அறிவுறுத்தி உள்ளதாம்.












Click it and Unblock the Notifications