காங்கிரசில் உட்கட்சி ஜனநாயகம் உள்ளதா? அன்று ஜிதேந்திர பிரசாதா, இப்போ சசி தரூர்! நம்ப வைத்து ஏமாற்றம்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில், சசி தரூர் ஜிதேந்திர பிரசாதா போல கடைசியில் ஏமாற்றுப்பட்டுவிடுவார் என்றும் அப்படித்தான் தற்போதைய நிலவரம் இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பழமையான காங்கிரஸ் கட்சி தற்போது தொடர் தோல்விகளால் தடுமாறி வருகிறது.
காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.
டுவிஸ்ட்.. சசிதரூர் “ஷாக்” - கழற்றிவிட்ட “ஜி 23”.. நேரு குடும்ப சாய்ஸான கார்கேவை ஆதரிப்பது ஏன்?
புத்துயிரூட்டும் நடவடிக்கை
ஆனாலும் தொடர்ந்து தோல்வி, கட்சி தாவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் என கட்சி கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. ஒருபக்கம் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும் என்று குரல் எழுந்த நிலையில், குலாம் நபி ஆசாத் உள்பட மூத்த தலைவர்கள் சிலரும் காங்கிரசில் இருந்து விலகி கட்சி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதனால், கட்சிக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்
அதன் ஒரு படியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு விருப்பம் உள்ள தலைவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கலும் தொடங்கியது. இந்த தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் கட்டாயம் போட்டியிட மாட்டார்கள் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனால், கட்சியின் தலைவராக பதவிக்கு யார் போட்டியிடக்கூடும் என்று பரபரப்பாக கடந்த சில வாரங்களாக பேசப்பட்டது.
அசோக் கெலாட் இல்லை
இந்த நிலையில், வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ளது. போட்டியிடுவதற்கு தலைமையிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று காங்கிரஸ் கூறியது. ஆனாலும், சசி தரூர் உள்பட ஒரு சிலரை தவிர பெரிய அளவில் வேறு யாரும் ஆர்வம் காட்டவில்லை. காந்தி குடும்பத்திற்கு நெருக்கமாக அறியப்பட்ட அசோக் கெலாட் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டாலும் பின்னர், ராஜஸ்தானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் போட்டியில் இருந்து விலகினார்.
சசி தரூர் - மல்லிகார்ஜூன கார்கே
இதையடுத்து மல்லிகார்ஜூன கார்கே வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூர் - மல்லிகார்ஜூன கார்கே போட்டியிட போவது உறுதியாகியுள்ளது. இதற்காக மல்லிகார்ஜூன கார்கே தான் வகித்து வந்த மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். சசி தரூர் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது தாரை தப்பட்டைகள் முழங்க வந்தார். ஆனாலும் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்கள் யாரும் வரவில்லை.
வாழ்த்து தெரிவிக்கவில்லை
அதேபோல், மூத்த தலைவர்கள் யாரும் சசி தரூருக்கு வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. சசி தரூருக்கு ஆதரவு அளித்தவர்களில் தெரிந்த முகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கார்த்தி சிதம்பரம், சல்மான் ஸோல், சந்தீப் திக்ஷித், உள்ளிட்ட வெகுசிலரே பிரபலமான தலைகளாக இருந்தன. வேட்பு மனு தாக்கல் செய்த சசி தரூர் வெளியே வந்த போது அங்கு ஊடகத்தினர் மட்டுமே கூடியிருந்தனர்.
சசி தரூருக்கு ஆதரவாக யாரும் வரவில்லை
கட்சியினர் யாரும் பெரிய அளவில் அவருக்கு ஆதரவாக வரவில்லை. உடனடியாக காரில் ஏறி புறப்பட்ட சசி தரூர் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவரது தேர்தல் அறிக்கையில் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் இடம் பெறாமல் இந்திய வரைபடம் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்திலும் காங்கிரஸ் எந்தவித விளக்கமும் அளிக்காமல் விலகிக் கொண்டது. அதேபோல், சசிதரூர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்றும் சிலர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு
ஆனால், காங்கிரஸ் கட்சியில் கலகக்குரல் எழுப்பிய ஜி 23 குழுவில் அங்கம் வகித்த மனிஷ் திவாரி, ஆனந்த் சர்மா கூட மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு அளித்து இருப்பதுதான் சுவாரசியமானதாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் மல்லிகார்ஜூன கார்கே வேட்பு மனு தாக்கலின் போது அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் ஆதரவாக வந்தனர். அதேபோல், கட்சியின் அலுவலகத்தில் கார்கேவுடன் வந்து காத்திருந்த தலைவர்கள் அனைவருக்கும் டீ, ஜூஸ், ஸ்னாக்ஸ் என சிறப்பாக உபசரிக்கப்பட்டது.
வெறும் கட்டுக்கதைதான்
அதேபோல், வேட்பு மனு தாக்கலின் போது சசி தரூருக்கு பெரிதாக யாரும் ஆதரவாக வரவில்லை. ஆனால் கார்கேவுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் குவிந்துவிட்டனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது மல்லிகார்ஜூன கார்கே வெற்றி ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கட்சி தலைவர் தேர்தலில் அனைவரும் போட்டியிடலாம் என்று அழைப்பு விடுப்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான் என்பது தெளிவாக தெரிவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
புதிய ஜிதேந்திர பிரசாதா
22 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு இப்போதுதான் தேர்தல் நடக்கிறது என்பது வேறு கதை. ஆனால், கடந்த தேர்தலில் ஜிதேந்திர பிரசாதா சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால், அவருக்கு கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. எனவே 'கடந்த 2000-ஆம் ஆண்டில் சோனியா காந்தி... 22 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது மல்லிகார்ஜூன கார்கே... என்பதே நிதர்சனம்' என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஜனநாயகம் என்பது கட்டுக்கதைதான் என்றும் காந்தி குடும்பத்தினர் ஆதரவு பெற்ற கார்கேவே எந்த சிரமும் இன்றி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதை கட்சியின் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதமே காட்டுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேச்சுக்கள் எழத்தான் செய்கிறது. சசி தரூர் புதிய ஜிதேந்திர பிரசாதா ஆகிறாரா? என்பதற்கு 20-ஆம் தேதி விடை கிடைத்து விடும்.