மஹூவா மொய்த்ரா... இப்ப மட்டும் "இந்தியா" கூட்டணி தேவையா? மமதா பானர்ஜியுடன் விடாது மோதும் காங்கிரஸ்!
டெல்லி: மஹூவா மொய்த்ரா எம்பி பதவி பறிப்பு விவகாரத்தில் "இந்தியா" கூட்டணியுடன் இணைந்து போராடுவோம் என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி அறிவித்திருப்பதை காங்கிரஸ் விமர்சனத்துக்குள்ளாக்கி வருகிறது.
5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக "இந்தியா" கூட்டணி என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு படுவேகமாக ஆக்டிவ்வாக இருந்தது. லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தைகளையும் "இந்தியா" கூட்டணி கட்சிகள் தொடங்கப் போவதாக அறிவித்தன.

5 மாநில தேர்தல்கள்: 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவித்ததுதான் தாமதம். காங்கிரஸ் கட்சி, "இந்தியா" கூட்டணியை ஏறக் கட்டி தமது வேலையை பார்க்க ஆரம்பித்தது. வட இந்திய மாநிலங்களில் கூட "இந்தியா" கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ளாமல் காங்கிரஸ் தனித்தே களம் காண்பதில் முனைப்பாக இருந்தது. இதனால் வட இந்திய மாநிலங்களில் மாபெரும் தோல்வியை காங்கிரஸ் தழுவியது. வட இந்திய மாநிலங்களில் கணிசமான இடங்களைப் பெறுவோம்; இதன் மூலமாக லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேரத்தில் வாய்ஸை உயர்த்திக் காட்டலாம் என கணக்குப் போட்டது காங்கிரஸ். அத்தனையும் மண்ணாகிப் போனது.
இந்தியா கூட்டணி கூட்டம்: இதனால் உடனே "இந்தியா" கூட்டணி அவதாரத்தை காங்கிரஸ் பூசிக் கொண்டது. ஆனால் இதனை "இந்தியா" கூட்டணி தலைவர்களான மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், நிதிஷ்குமார் ரசிக்கவில்லை. இதனால் டிசம்பர் 6-ந் தேதி முழு அளவில் நடைபெற வேண்டிய "இந்தியா" கூட்டணி கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தக் கூட்டம் டிசம்பர் 17 அல்லது டிசம்பர் 18-ல் நடைபெற உள்ளது.
மஹூவா மொய்த்ரா: இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய புகாரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து சோனியா காந்தி தலைமையில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த மமதா பானர்ஜியும் "இந்தியா" கூட்டணியுடன் இணைந்து போராடுவோம் என்றார்.
காங்கிரஸ் கருத்து: என்னதான் மஹூவா மொய்த்ராவுக்கு ஆதரவாக காங்கிரஸ் போராட்டம் நடத்தினாலும் அவரது எம்பி பதவி பறிக்கு தொடர்பான வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு பக்கம் நின்றது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இன்னொரு பக்கம், 'இந்தியா' கூட்டணியை சில நாட்களுக்கு முன்னர் உதாசீனப்படுத்தி வந்தார் மமதா பானர்ஜி. தற்போது தமது கட்சி எம்பிக்கு சிக்கல் என்ற உடன் "இந்தியா" கூட்டணி எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார் மமதா. அதேபோலதான காங்கிரஸ் கட்சியினராகிய நாங்களும் 5 மாநில தேர்தலில் எங்கள் கட்சியின் நலனைப் பார்த்தோம். இப்போது மமதா செய்வது சரி எனில் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் நலனைப் பார்த்ததும் சரிதானே என வாதிடுகின்றனர் அக்கட்சியின் மூத்த தலைவர்கள். இப்போது டெல்லி அரசியலில் இதுதான் தீவிர விவாதமாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications