'கொரோனா சமயத்தில் மருத்துவமனை பக்கம் வராதவர்.. இப்போது வெளியே வருவது இதற்கு தான்..' காங். பாய்ச்சல்
டெல்லி: கொரோனா 2ஆம் அலை காலத்தில் மருத்துவமனைகளை ஆய்வு செய்யாத பிரதமர் மோடி, இப்போது மட்டும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை திடீரென ஆய்வு செய்தது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்திற்குப் பிரமதர் மோடி கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை மத்திய பாஜக அரசு இந்த புதிய கட்டிடத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி திடீர் விசிட்
இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மோடி'சென்ட்ரல் விஸ்டா' கட்டுமானப் பணிகளைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். அன்று காலை தான் ஐநா சபையில் உரையாற்றிவிட்டு, அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி, அன்று இரவே சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி இரவு 8.45 மணியளவில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர், சுமார் ஒரு மணி நேரம் வரை ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

காங்கிரஸ் சாடல்
இந்தச் சூழலில் பிரதமர் மோடியின் இந்த திடீர் விசிட்டை காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி கட்டப்பட்டு வரும் மருத்துவமனை அல்லது ஆக்ஸிஜன் ஆலையைப் பார்வையிடவில்லை. 3 மாதங்களுக்கு முன் நாம் கொரோனா பாதிப்பு காரணமாக நமக்கு நெருக்கமானவர்களை இழந்து கொண்டிருந்தோம். அப்போது நாம் அன்பு செலுத்தியவர்களைப் பாதுகாக்க முயன்று கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் வெளியே வராத பிரதமர் இப்போது ரூ 30 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தைப் பார்வையிடுகிறார்.

கொரோனா 2ஆம் அலை
கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் அவர் எதாவது மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டாரா? அப்போது அவர் எதாவது மருத்துவமனைகளை ஆய்வு செய்திருந்தால், இப்போது பிரதமர் செய்ததை நாங்கல் வரவேற்று இருப்போம். ஆனால் அவர் அப்போது அதைச் செய்யவில்லை. எனவே, எங்களால் பிரதமரின் இந்த செயலை ஆதரிக்க முடியாது. எந்தவொரு சிந்தனையும் உணர்ச்சியும் இல்லாத இந்த செயலை எப்படி ஆதரிக்க முடியும். நாடு இன்னும் கொரோனா உண்டாக்கிய வலி, வேதனை, துயரத்தில் இருந்து மீளவில்லையே" என்று கடுமையாகச் சாடினார்.

அமெரிக்கப் பயணம்
அதேபோல முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் பிரதமரின் நடவடிக்கைகளைச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அவரது புதுப்புது அவதாரங்கள். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையைத் தவிர வேறு எதுவும் இல்லை" எனச் சாடியுள்ளார். அதேபோல பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்திற்குப் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சர்வதேச ஊடகங்களும் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடவில்லை என்றும் இதை மறைக்கவே உடனடியாக அமெரிக்காவில் இருந்து திரும்பிய அதே நாளில் பிரதமர் நரேந்திர மோடி சென்ட்ரல் விஸ்டா திட்டத்தைப் பார்வையிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியினர் சாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications