திரும்ப வர்றேன்னு சொல்லு-காங்கிரஸ் புதைகுழிக்குப் போகலை- அடித்து சொல்லும் மேகாலயா, திரிபுரா ரிசல்ட்!
பெரும் பலவீனங்களை எதிர்கொண்ட போதும் மேகாலயா, திரிபுராவில் காங்கிரஸ் மீண்டு எழுந்துள்ளது.
டெல்லி: காங்கிரஸ் கட்சி எத்தனை புயல்கள் வீசினாலும் அத்தனையையும் எதிர்கொண்டு மீண்டு(ம்) எழும் என்பதையே மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா சட்டசபை தேர்தல்கள் அடித்துச் சொல்கின்றன.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அனைத்திலும் காங்கிரஸ் கோலோச்சிக் கொண்டிருந்தது ஒரு காலம். இப்போது அத்தனை மாநிலங்களிலும் தலைகீழ் நிலவரம்தான் காங்கிரஸுக்கு.

திரிபுராவில் இடதுசாரிகள் கொடிகட்டிப் பறந்த போது பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ். ஆனால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையுமே பாஜக கபளீகரம் செய்தது. இதனால் இனி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம், திரிபுராவில் இல்லை என்றே கூறப்பட்டது. 2018 சட்டசபை தேர்தல் முடிவுகளும்கூட அப்படித்தான் இருந்தன. 59 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அம்மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அத்தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் மொத்தம் 1.79% மட்டும்தான்.
2021 சட்டசபை தேர்தலில் இடதுசாரிகளும் காங்கிரஸும் கை கோர்த்து தேர்தலை எதிர்கொண்டன. இத்தேர்தலில் பாஜகதான் வென்றிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் 3 இடங்களில் வென்றுள்ளது. வெறும் 1.79% ஆக இருந்த அதன் வாக்கு சதவீதம் 8.61% ஆக அதிகரித்து மலைக்க வைத்திருக்கிறது.
மேகாலயாவில் 2018 சட்டசபை தேர்தலில் 21 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாகவே உருவெடுத்தது காங்கிரஸ். ஆனால் அப்போது என்பிபி, 2 இடங்களில் வென்ற பாஜக உள்ளிட்டவை இணைந்து ஆட்சியை அமைத்தன. அத்துடன் ஓயவில்லை. காங்கிரஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினர். இதனால் மேகாலயா மாநிலத்திலும் காங்கிரஸுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதாகவே கூறப்பட்டது.
2021 சட்டசபை தேர்தல் முடிவுகளோ, காங்கிரஸுக்கு முடிவுரை எழுத நினைத்தவர்களின் கனவு நிறைவேறவில்லை. இத்தேர்தலில் ஒழிக்கப்பட்டுவிட்டதாக எண்ணப்பட்ட காங்கிரஸ் கட்சி, 5 இடங்களில் வாகை சூடி உள்ளது. காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை தந்த திரிணாமுல் காங்கிரஸும் 5 இடங்களில்தான் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 13.34% வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸை கபளீகரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 13.67% வாக்குகளைப் பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சாகர்திகி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது ஆளும் காங்கிரஸை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திவிட்டது. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 80622 வாக்குகளையும் திரிணாமுல் வேட்பாளர் 58296 வாக்குகளையும் பெற்றுள்ளார். இத்தொகுதியில் பாஜகவுக்கு 23156 வாக்குகள்தான் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 47.89% வாக்குகளையும் திரிணாமுல் காங்கிரஸ் 34.62% வாக்குகளையும் பாஜக 13.75% வாக்குகளையும் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது அடித்தள கட்டமைப்பின் வாக்குகளை இன்னமும் வைத்திருக்கிறது. அதனை உயிர்ப்பித்து வெற்றியை அறுவடை செய்வதற்கான சரியான எழுச்சியான ஒரு தலைமை தேவை என்பதைத்தான் இப்போதைய தேர்தல் முடிவுகள் வெளிப்படையாகவே சொல்கின்றன என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications