3 மாசம் ஆகபோகுது.. என்ன பண்ணீங்க.. மோடியின் பொறுப்பற்ற செயல்.. திட்டி தீர்க்கும் காங்கிரஸ் மேலிடம்!
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், சாத்தியமான நிறுவனங்களில் வீட்டில் இருந்து வேலை (Work From Home) செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
ஈரான் - அமெரிக்கா இடையே போர் முடிவு வராத நிலையில் இந்தியப் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் காரணத்தால் மோடி நாட்டின் அன்னிய செலாவணியை சேமிக்க வொர்க் ப்ரம் ஹோம், பெட்ரோல் - டீசல் பயன்பாட்டை குறைப்பது, சமையல் எண்ணெய் பயன்படுத்துவதை குறப்பது, தங்கம் வாங்குவதை நிறுத்துவது, வெளிநாட்டு பயணத்தை குறைப்பது போன்ற யோசனைகளை முன்வைத்துள்ளார்.

காங்கிரஸ் கடும் விமர்சனம்
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "ஈரான்-அமெரிக்க போர் மூன்று மாதங்களைத் தாண்டியும், பிரதமர் மோடி இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் இன்னும் தெளிவற்ற நிலையிலேயே உள்ளார்" என்று விமர்சித்தார்.
அவர் மேலும், "பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்குவதற்கு பதிலாக, சர்வதேச பொருளாதார நெருக்கடியால் நமது பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான திட்டங்களை உருவாக்க வேண்டும்" என்று கூறினார். மக்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளுவது வெட்கக்கேடு, பொறுப்பற்றது, ஒழுக்கமற்ற செயல்.
கே.சி.வேணுகோபால் தனது அறிக்கையில், "தேர்தல்கள் மற்றும் சிறு அரசியல் விஷயங்களே பிரதமரின் முன்னுரிமையாக இருக்கும் போது, இறுதியில் ஏற்படும் விளைவு பொருளாதாரப் பேரழிவாகும்" என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவரது கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடியின் பின்னணி
தற்போதைய ஈரான் - அமெரிக்க மோதல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்தியா போன்ற எரிபொருள் இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள நாடுகளுக்கு இது பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் அறிவிப்பு எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது என்றாலும், காங்கிரஸ் இதை மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கிறது.












Click it and Unblock the Notifications