எல்லாம் ஓகே.. இருந்தாலும் பிகேவுக்கு கிரீன் சிக்னல் இல்லை! காங். மவுனம் சாதிக்க இதுதான் காரணமாம்
டெல்லி: பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், வழக்கம் போல காங்கிரஸ் இதில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Recommended Video
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைமை மீதான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து மோசமான தோல்விகளைச் சந்தித்து வருவதால், தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பிரசாந்த் கிஷோர்
இந்தச் சூழலில் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் சோனியா காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தை முன்மொழிந்து இருந்தார். இது தொடர்பாக ஆலோசிக்க 3 நாட்களில் இரு முறை பிகே காங்கிரஸ் தலைமையைச் சந்தித்தார். அவரது திட்டம் குறித்து காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கொண்ட குழு ஆலோசித்து வந்தாலும் கூட, இதில் இறுதி முடிவைச் சோனியா காந்தியே எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

மாபெரும் மாநாடு
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், பிகேவை கட்சியில் இணைப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதுபோல எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்குப் பதிலாக 2024 தேர்தல்களுக்கு முன் இருக்கும் "அரசியல் சவால்களை" எதிர்கொள்ள ஒரு "அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை" காங்கிரஸ் தலைமை அறிவித்தது. மேலும், அடுத்த மாதம் ராஜஸ்தானின் உதய்பூரில் மூன்று நாள் மாநாடு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்க் ஃபோர்ஸ்
சிறப்பு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சோனியா காந்தி இந்த 2024 டாஸ்க் ஃபோர்ஸை அமைத்துள்ளார். இது தொடர்பாகக் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சுமார் 400 தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். அதில் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து ஆலோசிக்கப்படும்.

பிரச்சினை
விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பட்டியலின சாதியினர், பழங்குடியினர், ஓபிசிக்கள், மதம் மற்றும் மொழியியல் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகள், சமூக நீதி குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும். காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும் கட்சியை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் இதில் ஆய்வு செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

முக்கிய தலைவர்கள்
பிகே திட்டம் தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் ஏழு மூத்த தலைவர்களைக் கொண்ட குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்த குழுவில் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய சிங், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இந்த குழு பிகே உடனும் கூட ஆலோசனை நடத்தி இருந்தது.

தெலுங்கானா
பிகே திட்டத்திற்குக் காங்கிரஸ் கிரீன் சிக்னல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை தெலுங்கானா தலைநகர் சென்றார். அங்கு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே அவர் தங்கினார். அடுத்தாண்டு இறுதியில்தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கேசிஆர் கட்சி உடன் இணைந்தும் கூட ஐபேக் பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய முடிவு
இது காங். வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், பிகே திட்டம் குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழு ஒன்றை முன்வைத்துள்ளது. அதாவது பிகே மற்ற அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டே காங்கிரஸ் இறுதி முடிவை எடுக்க தாமதித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications