"வரி பயங்கரவாதம்.." வருமான வரித்துறையை கண்டித்து காங்கிரஸ் நடத்திய நாடு தழுவிய போராட்டம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சி ரூ.1,823.08 கோடியைச் செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இதைக் கண்டித்து காங்கிரஸ் நாடு முழுக்க இன்று போராட்டம் நடத்தியது.
2017-18 முதல் 2020-21 வரையிலான ஆண்டுகளுக்கான வருமான வரி மற்றும் அபராதமாக ரூ. 1,823.08 கோடியைச் செலுத்த வேண்டும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

கடந்த பிப்ரவரி மாதம் தான் வருமானவரித் துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்குகளில் தவறுகள் இருப்பதாகக் கூறி ரூ.200 கோடி அபராதம் விதித்த நிலையில், இப்போது ரூ.1700 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காங்கிரஸ்: ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், காங்கிரஸை மொத்தமாக முடக்கவே வருமானவரித்துறையின் இந்த நோட்டீஸை அனுப்பி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பொருளாதார ரீதியாக முடக்க பாஜக அரசு முயல்வதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ரூ. 1700 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதைக் கண்டித்து காங்கிரஸ் இன்று நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்த உத்தரவு வந்துள்ள நிலையில், வருமான வரித்துறையின் இந்த உத்தரவு ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
போராட்டம்: இதற்கிடையே வருமான வரித் துறையின் இந்த நோட்டீஸை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு எதிராகவும் காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுக்க போராட்டம் நடைபெற்றது. ரூ. 1,823.08 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. நாடு முழுக்க நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்
முன்னதாக நாடு முழுக்க உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அழைப்பு விடுத்து இருந்தார். அப்போது இது தொடர்பாக அவர் கூறுகையில், "காங்கிரஸின் எட்டு ஆண்டுக்கால வருமான வரி அறிக்கைகள் சட்டவிரோதமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இப்போது மிகப் பெரிய அபராதத்தை விதித்து உள்ளனர்
அப்பட்டமான தாக்குதல்: இது ஜனநாயகத்தின் அடிப்படைகள் மீதான அப்பட்டமான தாக்குதலைத் தவிர வேறு எதுவும் இல்லை. லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் மீது வரி பயங்கரவாத நடவடிக்கை எடுத்துள்ளனர். இதைக் கண்டித்து அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் மாவட்ட தலைமையகங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும். மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதில் பங்கேற்பார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications