பாஜக நன்கொடை பெற்று "ஊழல்" நிறுவனங்களை ஊக்குவிக்கிறது - DHFL நன்கொடை குறித்து காங்கிரஸ் விமர்சனம்
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கடன் மோசடியில் சிக்கிய டி.எச்.எஃப்.எல் துணை நிறுவனங்களிடம் ஆளும் பாஜக கட்சி ரூ.27.5 கோடி நன்கொடை வாங்கி இருக்கும் நிலையில், பாஜக ஊழல் நிறுவனங்களை ஊக்குவிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.
திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் (DHFL) நாடு முழுவதும் பல்வேறு கிளைகளையும், துணை நிறுவனங்களையும் நடத்தி வருகிறது.
பிரதமர் மோடி மக்கள் குரலை கேட்பதில்லை.. அக்னிபாத் திட்டம் அவசர கதியிலானது! ராகுல், பிரியங்கா சாடல்
இந்த நிறுவனம் 17 வங்கிகளில் ரூ.34,615 கோடி வரை கடன் பெற்று அதனை திருப்பி வழங்காமல் மோசடி செய்து இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.
நன்கொடை வசூலித்த பாஜக
இந்த நிலையில், 2014 - 15 நிதியாண்டில் பாஜக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த நிதி விவர அறிக்கையில், எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி DHFL நிறுவன விளம்பரதாரர்களால் நடத்தப்படும் RKW டெவலப்பர்ஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்திடம் இருந்து கடந்த 2014 - 15 நிதியாண்டில் ரூ.10 கோடி நன்கொடை பெற்றுள்ளது குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வத்வான் குடும்பத்தார்
அதேபோல் DHFL நிறுவன உரிமையாளர்களுக்கு தொடர்புடைய வத்வான் குளோபல் கேபிடல் லிமிட்டட் என்ற நிறுவனத்திடமும் ரூ.10 கோடியை பாரதிய ஜனதா கட்சி நன்கொடையாக பெற்று இருப்பது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் உரிமையாளர்களான கபில் வத்வான், தீரஜ் வத்வான் ஆகியோர் DHFL வங்கிக்கடன் ஊழலில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கின்றனர்.
ரூ.42,871 கோடி வங்கிக் கடன்
மேலும் வத்வான் குடும்பத்தினரால் நடத்தப்படுவதாக கூறப்படும் தர்ஷன் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்தும் பாஜக ரூ.7.5 கோடியை நன்கொடையாக வசூலித்துள்ளது. அண்மையில் இந்திய யூனியன் வங்கி அளித்த புகாரில் DHFL நிறுவனம் 17 வங்கிகளின் கூட்டமைப்பில் இருந்து 2010 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ரூ.42,871 கோடி வரை நன்கொடை பெற்று உள்ள திருப்பி செலுத்தாமல் ரூ.34,615 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத்தே, ரூ.34,615 கோடி மோசடி செய்த நிறுவனத்துடன் பாஜகவுக்கு தொடர்பு இருப்பது கவலையளிக்கிறது. பாஜக இந்த நிறுவனத்திடம் நன்கொடை பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட அனுமதியளித்து உள்ளது. பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 2.6 லட்சம் போலி வீட்டுக் கடன் கணக்குகளை ஏற்படுத்திய ஒரு நிறுவனம் மோசடி செய்திருக்கிறது. கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிய நீரவ் மோடி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையாவிடம் பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.