நெருங்கும் தமிழக சட்டசபை தேர்தல்..காங்கிரஸ் காரிய கமிட்டியில் கார்கே சொன்ன அட்வைஸ்! முக்கிய விவாதம்
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்தது. மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம் உள்பட 5 மாநில சட்டசை தேர்தல்கள் குறித்த முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய காரிய கமிட்டி கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல் பிரேதச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த பிறகு நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் அதிக கவனம் பெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அசாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரேதசம் உள்ளிட்டவற்றுக்கு 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த வேளையில் மல்லிகார்ஜூன கார்கே, ‛‛அனைத்து மாநில தேர்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்'' என்று அட்வைஸ் வழங்கினார்.

மேலும் சமீபத்தில் மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (100 நாள் வேலை) விபி-ஜி ராம் ஜி என்று பெயர் மாற்றம் செய்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விஷயத்தில் அடுத்ததாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது.
அதேபோல் பீகார் தேர்தலில் ஆர்ஜேடி கட்சியுடன் கூட்டணி வைத்தும் பாஜக கூட்டணியை வீழ்த்த முடியாதது ஏன்? கோட்டை விட்டது எந்த இடத்தில் என்பது பற்றியும் தலைவர்கள் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பீகாரில் நடந்த தவறை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிற மாநில சட்டசபை தேர்தல்களில் செய்யக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications