மோடி நாடாளுமன்ற பேச்சில் வழக்கமான ஆவேசம் மிஸ்சிங்.. பின்னணியில் உள்ள காரணம் இதுதான்!
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு நடுவே தொகுதி மறுவரையறை மற்றும் நாடாளுமன்றம்- சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி ஆக்ரோஷமாக பேசவில்லை. எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்வதை தவிர்த்தார். இது பலருக்கும் கேள்வியை எழுப்பி உள்ள நிலையில் அதன் பின்னணி மசோதாக்களை நிறைவேற்ற தேவையான மெஜாரிட்டி லோக்சபா, ராஜ்யசபாவில் இல்லை என்பதும், எதிர்க்கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பது தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி இங்கே பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லோக்சபா தொகுதி மறுவரை செய்வது தொடர்பாக 3 மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026 (பெண்களுக்கான 33 இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம், சட்டசபையில் உறுதி செய்யும் மசோதா) மற்றும் மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Delimitation Bill) 2026 ஆகியவற்றை அறிமுகம் செய்தார். அதேபோல் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார்.
எதிர்க்கட்சிகளை சீண்டாத மோடி
இதில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு பல எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால் தொகுதி மறுவரையரை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். பொதுவாக பிரதமர் மோடி லோக்சபாவில் நடக்கும் விவாதங்களில் பேசினால் அனல் பறக்கும். காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக, ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸை சீண்டுவார்.
ஆனால் இன்றைய மோடியின் பேச்சு அப்படியானதாக இல்லை. மோடி தனது பேச்சில் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சிகளையும் அவர் சீண்டவில்லை. மோடியின் முழு பேச்சும் மசோதா சார்ந்தும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மட்டுமே இருந்தது.
விமர்சிப்பதை மோடி தவிர்த்தது ஏன்?
இதுபற்றி மோடி, '' மகளிர் இடஒதுக்கீடு மசோதா இந்தியாவின் நாடாளுமன்றத்தின் வரலாற்றில் முக்கிய தருணமாக அடையாளப்படுத்தப்படும். இந்தச் சட்டம் உண்மையில் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த மசோதா 30 ஆண்டுகளுக்கு முன்பே சட்டமாக்கப்பட்டு இருக்க வேண்டும். அதன்பிறகு இப்பாது வலுப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலமாக நாட்டுக்கான தேசிய கொள்கை உருவாக்கத்தில் பெண்கள் அதிகமாக ஈடுபட முடியும். மகளிர் இடஒதுக்கீடு கொண்டு வரும் இந்த தருணத்தை எம்பிக்கள் யாரும் தவறவிடக்கூடாது'' என்று கூறினார்.
மோடியின்இந்த அமைதியான பேச்சு பலருக்கும் கேள்வியை எழுப்பி உள்ளது. இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது அதுதான் நம்பர்ஸ் கேம். அதாவது இந்த மசோதாவை நிறைவேற்ற தேவையான எம்பிக்களின் எண்ணிக்கை தற்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இல்லை. இதனால் மசோதாவை நிறைவேற்ற தேவையான மெஜாரிட்டிக்கு எதிர்க்கட்சி எம்பிக்களின் ஆதரவு தேவை. இதனை மனதில் வைத்து தான் மோடி அட்டாக் மோடில் பேசாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மெஜாரிட்டி இல்லை
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டி இருக்கிறதே.. அதனால் தானே ஆட்சியில் உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். ஆம், அது உண்மை தான். ஆனால் இப்போது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மசோதா என்பது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா.
நாடாளுமன்றத்தை பொருத்தவரை மொத்தம் 4 வகையான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். இதில் ஒன்று சாதாரண மசோதா. இதற்கு சபையில் உள்ளவர்களில் 50சதவீதத்துக்கு அதிகமான ஆதரவு இருந்தால் நிறைவேறிவிடும். இரண்டாவது பணமசோதா. இது லோக்சபாவில் மட்டும் தான் கொண்டு வர முடியும். இதற்கும் சபையில் இருக்கும் எம்பிக்களில் 50 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் ஆதரவு இருந்தால் நிறைவேற்றிவிடலாம். அதேபோல் .நிதி மசோதாவும் சபையில் உள்ளவர்களின் 50 சதவீதத்துக்கு மேலானவர்களின் ஆதரவில் நிறைவேற்றி விடலாம்.
ஆனால் அரசமைப்பு சட்ட திருத்த மசோதா என்பது தான் சிக்கல். இதற்கு தான் லோக்சபா, ராஜ்யசபாவில் 3ல் 2பங்கு எம்பிக்களின் ஆதரவு வேண்டும். தற்போதும் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026 (பெண்களுக்கான 33 இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம், சட்டசபையில் உறுதி செய்யும் மசோதா) தாக்கலாகி உள்ளது. இதனை நிறைவேற்ற பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு லோக்சபா, ராஜ்யசபாவில் மெஜாரிட்டி இல்லை.
லோக்சபாவில் எவ்வளவு பேர்?
புரியும்படி கூற வேண்டும் என்றால் நம் நாட்டில் மொத்த லோக்சபா எம்பிக்களின் எண்ணிக்கை 543. இப்போது 3 இட்ங்கள் காலியாக உள்ளன. இதனால் 540 எம்பிக்கள் உள்ளனர். இதில் 3ல் 2பகுதி என்பது 360 எம்பிக்கள். இதனால் லோக்சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்ற 360 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 292 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். 68 எம்பிக்கள் குறைவாக உள்ளனர்.
ராஜ்யசபாவில் எவ்வளவு பேர்?
அதேபோல் ராஜ்யசபாவை எடுத்து கொண்டால் மொத்தம் 250 எம்பிக்கள் இருப்பார்கள். இதில் 238 பேர் எம்எல்ஏக்கள் வழியாக தேர்வு செய்யப்படுவார்கள். 12 பேர் நியமன எம்பிக்கள் ஆவார்கள். தற்போது 250ல் 5இடங்கள் காலியாக உள்ளன. 245 பேர் மட்டுமே ராஜ்யசபா எம்பிக்களாக உள்ளனர். அந்த வகையில் பார்த்தால் அரசியல் சட்ட மசோதாவை நிறைவேற்ற 3ல் 2 பங்கு என்றால் 163 எம்பிக்கள் தேவை.. ஆனால் பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு ராஜ்யசபாவில் 138 எம்பிக்கள் மட்டுமே உள்ளன. இதனால் பிற கட்சிகளை சேர்ந்த 25 எம்பிக்களின் ஆதரவு பாஜகவுக் தேவையாக உள்ளது.
நாளை இருக்கும் சம்பவம்
இதனால் தான் பிரதமர் மோடி இன்று எதிர்க்கட்சிகளை சீண்டவில்லை. எதிர்க்கட்சிகளின் ஆதரவில் மசோதாவை நிறைவேற்றும் நோக்கில் பிரதமர் மோடி அமைதி காத்துள்ளார். ஆனால், நாளை மாலை 4 மணிக்கு நடக்கும் வாக்கெடுப்பில் மசோதாவிற்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் பிரதமர் மோடி உள்பட பிற மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் அனைவரும் வெகுண்டெழுவார்கள். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை எதிர்க்கட்சியினர் தோற்கடித்துவிட்டன. பெண்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்று 'அட்டாக்'கை தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications