2ஆம் அலை இன்னும் முடியவில்லை.. ஒரே மாதத்தில் 50 மாவட்டங்களில் இரட்டிப்பான கொரோனா.. வல்லுநர் வார்னிங்
டெல்லி: நாட்டில் கொரோனா 2ஆம் அலை முடிந்துவிட்டதாக உறுதியாகக் கூற முடியாது என்றும் நாட்டின் 50 மாவட்டங்களில் கடந்த ஒரே மாத்தில் கொரோனா பாதிப்பு 100% அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் வல்லுநரும் பேராசிரியருமான கிரிதர் R பாபு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் புதிய தளர்வுகளை மெல்ல அறிவித்து வருகிறது.
இந்நிலையில், தொற்றுநோயியல் வல்லுநரும் பேராசிரியருமான கிரிதர் R பாபு, இந்தியாவில் கொரோனா பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைவாகவே பதிவு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். நம்பகமான தகவல்கள் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிப்பது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா 2ஆம் அலை
இது குறித்து கிரிதர் R பாபு கூறுகையில், "இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா 2ஆம் அலை தாண்டிவிட்டதா என உறுதியாகக் கூற முடியாது. தேசியளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிலைமை வேறு வேறாக உள்ளது. மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களை நோக்கி கொரோனா பரவியுள்ளது. கிராமப்புறங்களில் மக்கள் நெருக்கடி குறைவு என்பதால் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது,

11 பெரிய மாநிலங்கள்
நாட்டிலுள்ள பெரிய 11 மாநிலங்களில் - உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 70% மற்றும் கொரோனா உயிரிழப்புகளில் 75% ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் வைரஸ் பரவல் வேகம் 100% வரை அதிகரித்துள்ளது. இதில் 11 மாவட்டங்களில் 200% வரை கொரோனா அதிகரித்துள்ளது.

50 மாவட்டங்கள் 100% அதிகரித்த கொரோனா
ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 50 மாவட்டங்களில், ஒரு மாதத்தில் கொரோனா பாதிப்பு 100% அதிகரித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக நாட்டில் கொரோனா 2ஆம் அலை முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூற முடியாது. அது சரியாக இருக்காது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனைகள் குறித்து கிரிதர் பாபு கூறுகையில், "கொரோனா பரிசோதனைகள் குறைந்தாலும் கொரோனா குறைவானதைப் போலத் தெரியும். ஆனால் பிரச்சினையின் தீவிர தன்மையை நம்மால் கண்டறிய முடியாது. ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறித்த தகவல்களை நாம் பெற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இதை செய்வது கடினமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் நிலைமையின் தீவிர தன்மையைப் புரிந்துகொள்ள இது மட்டுமே ஒரு வழி" என்றார்.

கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா சடலங்கள் கங்கையில் வீசப்பட்டது குறித்துப் பேசுகையில், "இப்படி பல முறைகளில் நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்புகளும் குறைத்து காட்டப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்தும் உயிரிழப்புகள் குறித்தும் நமக்குத் தெளிவான தகவல்கள் தேவை. ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் கொரோனா உயிரிழப்பு தகவல்களை நேரடியாகப் பெறலாம். அதேபோல மயானங்கள், இடுகாடுகளில் இருந்தும் உயிரிழப்புகள் குறித்த தரவுகளைப் பெறலாம். முதல் அலைக்குப் பிறகு தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களை இதைச் செய்தன. இதன் மூலம் கொரோனா உயிரிழப்புகள், கொரோனா அல்லாத உயிரிழப்புகளைப் பிரிக்க முடியும். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான முடிவை எடுக்க முடியும்." என்றார்.












Click it and Unblock the Notifications