நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? - மத்திய ஆய்வுக்குழு பரபரப்பு அறிக்கை
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என மத்திய ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
டெல்லி: நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை என்று மத்திய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்தார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னக்கலைவாணர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் விவேக். தனது நகைச்சுவை நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். ரசிகர்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகம் விதைப்பவர். சினிமாவில் நடிப்பது தவிர மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார் விவேக்.
கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 17ஆம் தேதி அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
சொந்த தடுப்பூசி உற்பத்தி செய்து மகத்தான சாதனை.. 130 கோடி மக்களுக்கும் நன்றி.. பிரதமர் மோடி பெருமிதம்
கொரோனா தடுப்பூசி
மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திவந்த நடிகர் விவேக், தனது மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அப்போது கேட்டுக்கொண்டார்.
விவேக் மரணம்
தடுப்பூசி செலுத்திய மறுநாளே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திய காரணத்தால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என பலரும் கூறினர். கொரோனா தடுப்பூசிக்கும், விவேக் மரணத்துக்கும் சம்பந்தம் இல்லை என மருத்துவமனை நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் விளக்கம் அளித்தது.
தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
இது தொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். மேலும், அவருக்கு இதற்கு முன்பு எப்போதாவது மாரடைப்பு ஏற்பட்டதா? கொரோனா தடுப்பூசி செலுத்திய நிலையில்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பது குறித்து மருத்துவ ரீதியாக விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கையைப் பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு வெளியிடவில்லை என தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு அளித்தார். அந்தப் புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
அறிக்கை கேட்ட ஆணையம்
மனித உரிமைகள் ஆணையம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் சமூக ஆர்வலர் சரவணனின் புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி அது தொடர்பாக 8 வாரங்களில் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருந்தது.
மாரடைப்பால் மரணம்
இதனிடையே நடிகர் விவேக்கின் மரணம் குறித்து தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆய்வு செய்த மத்திய குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரு நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் 17ஆம் தேதி விவேக் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை. ஏப்ரல் 15ஆம் கொரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்ட நடிகர் விவேக் மாரடைப்பால் ஏப்ரல் 17-ல் உயிரிழந்தார். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 கோடி தடுப்பூசிகள்
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன் ஆகிய 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பெரும்பாலும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளே இந்தியாவில் பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த வேக்சின் குறித்து தொடக்கத்தில் பல்வேறு பொய்யான தகவல்கள் பரவின. இதனால் தடுப்பூசி செலுத்த மக்கள் தயக்கம் காட்டினர். கொரோனா 2ஆம் அலைக்குப் பின்னரே இந்தியாவில் வேக்சின் பணிகள் வேகம் பெற்றன. இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.