இன்னும் சில வாரம்தான்.. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ரெடி.. மோடி அறிவிப்பு
டெல்லி: இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்றும், முதலில் சுகாதார பணியாளர்கள், முதியோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம், கொரோனா தடுப்பூசி நிலை, வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனை
காணொளி காட்சி மூலமாக நடந்த இநத் ஆலோசனை கூட்டத்தில், லோக்சபா, ராஜ்யசபா தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மோடி பேசியதை பாருங்கள்.
சில வாரங்களில் தடுப்பூசி
உலகம் முழுக்கவே, செலவு குறைந்த தடுப்பூசியைத் தேடுகிறது. இந்தியாவில், சாத்தியமான 8 தடுப்பூசிகள் முக்கிய கட்டத்தில் உள்ளன. அவை விரைவில் கிடைக்கக்கூடும். அதற்காக நாம் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்னும் ஒரு சில வாரங்களில் தடுப்பூசி கிடைக்கும் என்று மருத்துவத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முதலில் யாருக்கு தடுப்பூசி?
தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்கள், மருத்துவ துறையினர் மற்றும் முதியோருக்கு செலுத்தப்படும். தடுப்பூசியின் விலை நிர்ணயம் குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு பேசி வருகிறது. மேலும் சேமிப்பு கிட்டங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். தடுப்பூசி விநியோகத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் குழுக்கள் இணைந்து செயல்படுகின்றன. தடுப்பூசி விநியோக நிபுணத்துவம் இந்தியாவிற்கு இருக்கிறது.
இந்தியாவை கவனிக்கும் உலகம்
நமது விஞ்ஞானிகள் கோவிட் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். மலிவான மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை உலகம் எதிர்பார்க்கிறது. அதனால்தான் இந்தியாவை உலகம் கவனித்துக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கொரோனா நிலவரம்
இதற்கிடையில், இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை, 95,71,559 என்ற அளவில் உள்ளது. நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியது, தேசிய மீட்பு விகிதம் 94.20 சதவீதமாக உள்ளது. மொத்த கொரோனா வைரஸ் கேஸ் ஒரு நாளில் 36,595 என்ற அளவுக்கு இருந்தது.