ஆபத்தை உணர்த்தும் R factor.. இப்போது என்ன நிலைமை? 3ஆம் அலை தொடங்கிவிட்டதா? பரபர ரிப்போர்ட்
டெல்லி: கொரோனா பரவல் வேகத்தைக் குறிக்கும் R factor, ஆகஸ்ட் முதல் வாரத்தில் 1ஐ விட அதிகமாக இருந்த நிலையில், தற்போது கேரளா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால் R factor தற்போது ஒன்றுக்குக் கீழ் சென்றுள்ளது.
பொதுவாகவே கொரோனா பரவல் வேகத்தை R factor என்ற குறியீடு மூலம் தெரிந்து கொள்ளலாம். அதாவது இந்த R factor ஒன்றைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் கொரோனா பாதிப்பு வேகமாக இருப்பதாகப் பொருள்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு பரவுகிறது என்பதை R factor குறிக்கிறது. இது ஒன்றுக்குக் கீழ் இருந்தால் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக அர்த்தம்.

R factor
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் R factor ஒன்றைத் தாண்டியிருந்தது. அதன் பிறகு சில வாரங்கள் அதே நிலை தொடர்ந்தது. ஆனால், ஆகஸ்ட் முதல் வாரத்தில் R factor மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது. இது 3ஆம் அலையின் அறிகுறி என்றும்கூட சிலர் எச்சரிக்கை விடுத்தனர்.

ஒன்றுக்குக் கீழ்
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14 - 16 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் R factor 0.9 என்ற அளவுக்குக் குறைந்துள்ளதாக இந்திய கணித அறிவியல் நிறுவனத்தில் கொரோனா பரவல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் சித்பரா சின்ஹா தெரிவித்துள்ளார், குறிப்பாக, நாட்டிலேயே அதிக ஆக்டிவ் கேஸ்களை கொண்டிருக்கும் கேரளாவில் R factor ஒன்றுக்குக் கீழ் சென்றுள்ளது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் நிம்மதி
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேரளா சென்று, அங்கிருந்த கொரோனா பரவல் நிலை குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். கேரளாவுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சுமார் 1.11 கோடி வேக்சின் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார், மேலும், மாநிலத்தின் சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ 267 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கேரளா முதல் அலையைச் சிறப்பாகக் கையாண்டதாக அனைவரும் பாராட்டினர். ஆனால், 2ஆம் அலை ஏற்பட்ட போது, அதைக் கேரளா சிறப்பாகக் கையாளவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள்
வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளதாகவும் சித்பரா சின்ஹா தெரிவித்தார். அதேபோல கடந்த சில வாரங்களாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த மகாராஷ்டிராவிலும் R factor 0.89ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவிலேயே இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் மட்டுமே R factor 1ஐவிட அதிகமாக உள்ளது. அதேபோல தமிழ்நாடு மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும் R factor 1ஐ நெருங்குகிறது சற்றே கவலையளிக்கும் வகையில் உள்ளது

R factor நிலை என்ன
இந்த R factor மூலம் கொரோனா பரவல் வேகத்தை நம்மால் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். கொரோனா 2ஆம் அலை முடிந்த போது கடந்த மே 15 - ஜூன் 26 வரையிலான காலத்தில் இந்தியாவின் R factor 0.78ஆக இருந்தது. அந்த சமயத்தில் கொரோனா கேஸ்களின் வேகம் எந்தளவு வேகமாகக் குறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால், அதன் பிறகு மெல்ல அதிகரிக்கத் தொடங்கிய R factor, ஜூலை 3 முதல் 22 வரையிலான காலகட்டத்தில் 0.96ஆகவும் அதன் பிறகு ஜூலை 27 முதல் 31 வரையிலான காலகட்டத்தில் 1.03ஆகவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

3ஆம் அலை
இது கொரோனா 3ஆம் அலை குறித்த அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியது. அதேபோல மத்திய அரசும் வைரஸ் பாதிப்பு 37 மாவட்டங்களில் அதிகமாக இருப்பதாகவும், மாநில அரசுகள் வைரஸ் பாதிப்பு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின. இந்தச் சூழலில் இப்போது R factor 1க்கு கீழ் சென்றுள்ளது சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. இது 3ஆம் அலை ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டதாக சில ஆய்வாளர்கள் கூறியது சரியான கணிப்பு இல்லை என்பதையும் உணர்த்தும் வகையில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications