மீண்டும் பரவும் கொரோனா.. கேரளம், மேற்கு வங்கம், டெல்லியில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு
டெல்லி: நாடு முழுவதும் கொரோனோ தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 5 ஆயிரத்து 364 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் அதிகபட்சமாக கேரள மாநிலத்திலும், அதைத்தொடர்ந்து மேற்கு வங்கத்திலும், டெல்லியிலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கொரனோ பெருந்தொற்றானது நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. இதையடுத்து, உடனடியாக கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து, கொரோனா நோய்த் தொற்று பரவல் சற்று குறைந்திருந்தது. 2019 முதல் சுமார் 3 ஆண்டுகளுக்கு இந்த தொற்றானது நாட்டையே நிலைகுலையச் செய்தது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வந்தது. தற்போது இந்தியாவிலும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, கேரள மாநிலம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலத்தில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
இருப்பினும், தற்போது பரவி வருவது வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 364 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4,724 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் 2 பேருக்கும் கர்நாடகம், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவரும் என 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 764 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 194 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. உருமாற்றம் பெற்ற வைரஸ் வீரியம் இல்லாத கொரோனா தொற்று என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியோர், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.
கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை. சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications