ஸ்டேஜ்-3 ஆக இருக்கலாம்.. ஜாக்கிரதை.. இந்தியாவில் புதிய கொரோனா நோயாளிகளால் ஏற்படும் சந்தேகம்!
இந்தியாவில் தற்போது கொரோனா பரவி வரும் வேகத்தை பார்த்தால் அது ஸ்டேஜ் 3 வகை கொரோனா தாக்குதலாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
டெல்லி:கொரோனா வைரஸ்... சீனா, இத்தாலி, ஈரான் , தென் கொரியா, அமெரிக்கா என்று உலக நாடுகள் அனைத்தையும் மிக கடுமையாக பாதித்து வருகிறது. ஆயிரக்கணக்கில் தினமும் பலர் இந்த வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள்.
Recommended Video
இந்தியாவில் இந்த வைரஸ் இப்போதுதான் வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவும் வேகம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

வகைகள்
கொரோனா பரவுவதை மொத்தம் 4 வகையாக பிரித்து இருக்கிறார்கள். முதல் வகை மிக எளிமையானது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் நபருக்கு கொரோனா இருந்தால் அது ஸ்டேஜ் ஒன்று. அதாவது இவரை விமான நிலையத்திலேயே கண்டுபிடித்து, அப்படியே மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள். இதுதான் ஸ்டேஜ் ஒன்று. இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

இரண்டு எப்படி
இரண்டாவது வகை பரவல் ஸ்டேஜ் 2. இது கொரோனா தாக்கி, வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் நபர் ஒருவர் மூலம் அவரின் உறவினர்களுக்கும் வைரஸ் தாக்கினால் அதுதான் ஸ்டேஜ் 2. அதாவது சீனாவில் இருந்து டெல்லிக்கு ஒருவர் வருகிறார். அவருக்கு கொரோனா இருக்கிறது. அவர் மூலம் அவருடைய வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கும் கொரோனா ஏற்பட்டால் அது ஸ்டேஜ் 2. இதை local transmission என்று அழைப்பார்கள்.

மூன்றாவது வகை
மூன்றாவது வகை பரவல் ஸ்டேஜ் 3. இது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்க கூடியது. அதே டெல்லி நபரை எடுத்துக் கொள்ளலாம். சீனாவில் இருந்து வந்த அந்த நபர், ஒரு பாருக்கு செல்கிறார். அங்கு பலருடன் ஆட்டம் போடுகிறார். ஆனால் அவர்கள் எல்லாம் இவரின் உறவினர்கள் இல்லை. இப்போது அந்த கூட்டத்தில் யாராவது ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் அது ஸ்டேஜ் 3. அதாவது கொரோனா ஏற்பட்ட நபர் மூலம் சம்பந்தமே இல்லாத வேறு ஒருவருக்கு வைரஸ் தாக்கினால் அது ஸ்டேஜ் 3 . இதை community transmission என்று கூறுவார்கள்.

கடைசி வகை
நான்காவது வகைதான், எபிடமிக் - epidemic என்று அழைப்பார்கள். இதை கொடும் தொற்றுநோய் என்று தமிழில் அழைப்பார்கள். இது ஒருவர் மூலம் வேறு ஒரு நபருக்கு பரவி, அங்கிருந்து சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு நபருக்கு பரவினால் , அப்படியே பெருகிக்கொண்டே இருந்தால் அது epidemic. இத்தாலி, சீனாவில் தற்போது இப்படித்தான் யூகிக்க முடியாத அளவிற்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம்.

ஏன் சந்தேகம்
இந்தியாவில் இப்போது வைரஸ் பரவுவது ஸ்டேஜ் 2 என்று கூறுகிறார்கள். அதாவது கொரோனா பாதித்த நபர், மற்றும் அவரின் உறவினர்கள் ஆகியோருக்கு மட்டும்தான் இந்த வைரஸ் பரவி உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை பார்த்தால் அது ஸ்டேஜ் 3 ஆக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதாவது கொரோனா பாதித்த நபருக்கு சம்பந்தமே இல்லாத நபருக்கு வைரஸ் பரவுதல்.

சம்பந்தம் எப்படி
இப்படி சந்தேகம் அடைய காரணம் உள்ளது. உத்தர பிரதேசத்தில் சில கேஸ்கள், மாகாராஷ்டிராவில் 10க்கும் அதிகமான நபர்களுக்கு எப்படி கொரோனா வைரஸ் வந்தது என்றே தெரியவில்லை. இவர்களின் உறவினர்களுக்கு கொரோனா இல்லை, இவர்கள் வெளிநாடும் செல்லவில்லை. அதனால் இவர்கள் எல்லாம் ஸ்டேஜ் 3 கொரோனா பரவல் மூலம் பாதித்து இருக்கலாம், கண்டுபிடிக்க முடியாத வகையில் இவர்களுக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

சிக்கல்
ஒருவேளை இந்தியாவில் ஸ்டேஜ் 3 ஏற்பட்டு இருந்தால் அது பெரிய சிக்கல். அப்படி நடந்தால் இந்த வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். யாருக்கு வைரஸ் ஏற்படும் என்பதை யூகிக்க முடியாது. எப்படி ஒருவருக்கு வைரஸ் தாக்கும் என்பதை கணிக்க முடியாது. வுஹன் போல மொத்தமாக பல மாநிலங்களை மூடி, அனைத்தையும் முடக்கினால்தான் இந்த வைரஸை ஒடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications