இந்தியாவில் 24 மணிநேரத்தில் 90,802 பேருக்கு கொரோனா- 42 லட்சத்தை கடந்த பாதிப்பு
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 42 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 90802 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 90,802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 42 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 32.50 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரியும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகத்திலேயே உச்சமாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உலக அளவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல கட்ட கட்டுபாடுகளை விதித்தாலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொற்றுக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 42 லட்சத்தை கடந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32.50 லட்சம் பேராக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்தை கடந்துள்ளது. 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளது சற்றே ஆறுதலை தருகிறது.
இந்தியாவில் இறப்பு விகிதம் 1.72 சதவிகிதமாகவும் குணமடைந்தவர்கள் 77 சதவிகிதமாகவும் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.72 கோடியாக அதிகரித்துள்ளது. தினசரியும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருவதால் இன்னும் சில நாட்களில் உலக அளவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்தி முதல் இடத்தை தொட்டு விடும் இந்தியா என்ற அச்சம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications