ராகுல் காந்தி, டிகே சிவக்குமாருக்கு எதிராக பாஜக கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல்.. பின்னணி என்ன?
டெல்லி: காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஊழல் ரேட் கார்டு விளம்பரம் தொடர்பாக ராகுல் காந்தி, டிகே சிவக்குமாருக்கு எதிராக பாஜக சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக வரும் 18 ஆம் தேதி பட்டியலிடப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்துள்ளது. நாளை வாக்குப்பதிவு நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

தேர்தலை எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அடுத்து யார் ஆட்சி என்பதை அம்மாநில வாக்காளர்கள் தீர்மானிக்க இருக்கிறார்கள். கர்நாடக தேர்தல் நாடு முழுவதும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக கன்னட பத்திரிக்கைகளில்காங்கிரஸ் கட்சி, பஜகவின் ஊழல் விகித பட்டியல் என்ற பெயரில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்து இருந்தது. இதைத்தொடர்ந்து, கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி, ராகுல் காந்தி, டிகே சிவக்குமாருக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மே 5 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நாளிதழில் வெளியிட்ட விளம்பரம் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை வரும் 18 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

முன்னதாக இதே விவகாரத்தில் பாஜக லீகல் நோட்டீஸும் அனுப்பியிருந்தது. விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் மூன்று தலைவர்களுக்கு பாஜக சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக பாஜக மாநில செயலாளர் கேஷவ் பிரசாத் கூறும் போது, " காங்கிரஸ் வெளியிட்ட அந்த விளம்பரம் தீய நோக்கம் கொண்டதாகவும் பாஜகவிற்கு அவதூறு பரப்பும் வகையிலும் உள்ளது. அதன்காரணமாக நாங்கள் கங்கிரஸ் கட்சிக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்தோம்.
அந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையமும் அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இன்று வரை காங்கிரஸ் அதை செய்யவில்லை. எனவே நாங்கள் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளோம். ராகுல் காந்தியும் ட்விட்டரில் அதை பதிவிட்டு இருந்தார். எனவே அவரையும் ஒரு தரப்பாக சேர்த்து இருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications