நாளை இரண்டாம் கட்ட தேர்தல்... கேஸ் சிலிண்டர் விலையும் குறைப்பு.. காரணம் என்ன தெரியுமா?
டெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் கேஸ் சிலிண்டர் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாய் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நாட்டின் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்தது. அதேபோல கேஸ் சிலிண்சர் விலையும் சில மாதங்களில் 125 ரூபாய் வரை உயர்ந்தது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட இந்தாண்டு அந்நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து.
இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. சர்வதேச சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
இதையடுத்து வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை 10 ரூபாய் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று இரவு முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல அடுத்த வாரம் தமிழ்நாடு, கேரளா என 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தச் சூழ்நிலையில் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.