ஒற்றை காலில் 10 வினாடிகள் நிற்க முடியவில்லையா.. அப்போ 10 ஆண்டுகளில் மரணிக்க வாய்ப்பு.. பகீர் ஆய்வு
டெல்லி: ஒற்றைக் காலில் 10 வினாடிகளுக்கு மேல் நிற்க முடியவில்லையா அப்படியென்றால் நீங்கள் மரணமடைவதற்கான ஆபத்து அதிகரித்திருக்கிறது என்பது அர்த்தம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
நடுத்தர வயதினர் ஒற்றை காலில் 10 வினாடிகள் கூட நிற்க முடியவில்லை எனில் 10 ஆண்டுகளில் உயிரிழக்கக் கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது என புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் இறப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய ஆய்வு ஒன்றை நடத்த முடிவு செய்தனர்.

2008 ஆம் ஆண்டு
அதன்படி இந்த ஆய்வு 2008ஆம் ஆண்டு ஆய்வு தொடங்கியது. ரியோ டி ஜெனீரோவை சேர்ந்த டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ தலைமையிலான ஆய்வாளர்கள் இந்த ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வில் 51 முதல் 75 வயது வரையிலான 1,702 பேர் கலந்து கொண்டனர்.

12 ஆண்டுகள் ஆய்வு
2020 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் ஆய்வு நடந்து அதன் முடிவுகள் பெறப்பட்டன. அதில் முதியோர்களுக்கு மேற்கொள்ளும் பரிசோதனையில் சமநிலை பரிசோதனை (balancing test) ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். அது என்ன சமநிலை பரிசோதனை என்கிறீர்களா? இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் முதலில் உங்களது ஒரு காலை மேலே தூக்குங்கள் என கூறியுள்ளார்கள்.

3 வாய்ப்புகள்
அவ்வாறு தூக்கிய காலை மற்றொரு காலின் பின்பக்கத்தில் வைத்துக் கொண்டு கைகள் இரண்டும் இரு பக்கங்களில் தளர்வாக விடப்பட்டு, நேராக பார்க்கும்படி அவர்களிடம் கூறியுள்ளார்கள். ஆய்வில் கலந்து கொண்டோருக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த ஆய்வில் 5 இல் ஒருவர் தோல்வி அடைந்துள்ளார்.

10 ஆண்டுகளில் மரணம்
அடுத்த 10 ஆண்டுகளில் ஆய்வில் கலந்து கொண்ட 123 பேர் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளார்கள். வயது , பாலினம் உள்ளிட்ட காரணிகளை பரிசீலித்ததன் அடிப்படையில் ஒரு காலில் ஆதரவின்றி 10 வினாடிகளுக்கு நிற்க முடியவில்லை என்றால் 10 ஆண்டுகளில் அவருக்கு மரணம் ஏற்பட அதிக வாய்ப்புகள் அதாவது 84 சதவீதம் வாய்ப்புகள் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுவரை எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்திற்கும் அதிக ஆபத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.












Click it and Unblock the Notifications