வரலாறு காணாத குதிரை பேரம்.. ஆயத்தமாகும் கட்சிகள்.. என்னாகப் போகுதோ ஜனநாயகம்!
டெல்லி: லோக்சபா தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கவுள்ள நிலையில் இப்போதே ஆங்காங்கு குதிரை பேரங்கள் களை கட்ட ஆரம்பித்து விட்டன. வரலாறு காணாத குதிரை பேரத்தை நாடு சந்திக்கப் போகிறதோ என்ற அச்ச உணர்வில் மக்கள் உள்ளனர்.
முன்பெல்லாம் பதவிக்கு வருவதை மக்களுக்கு சேவை செய்வதற்காக மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தினர், சேவையும் செய்தனர். ஆனால் இன்று ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி ஆகி விட்டால் போதும், பல தலைமுறைகளுக்கு செட்டில் ஆகி விடலாம் என்ற குரூர எண்ணத்திற்கு கட்சியினர் வந்து விட்டனர். அரசியல் அந்த அளவுக்கு மோசமாக மாறி விட்டது.
மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று தற்போது ஆம் ஆத்மி கட்சியும் குற்றம் சாட்டியுள்ளது. உங்கள் எம்.எம்.எல்.ஏ.-க்கள் உங்களை விட்டு விலகப்போகிறார்கள். தீதி அவர்களே, இன்றைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார்கள். எனவே தேர்தல் முடிவுக்குப் பின் அவர்கள் பாஜக-வில் இணைவார்கள். இது கடந்த 29-ந்தேதி மேற்குவங்கம் ஸ்ரீராம்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது நமது பிரதமர் உதித்த வார்த்தைகள். அவரது இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.

மமதா பானர்ஜி
இது தொடர்பாக எதிர்வினையாற்றிய மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா மோடி குதிரை பேரத்தில் ஈடுபடுவது போல் இப்படி பேசியது அவமானமானது. அவரது வேட்பு மனுவை ரத்து செய்வதோடு அவர் பிரதமராக நீடிக்கவும் உரிமை கிடையாது என்று கண்டித்தார். நேதாஜி போன்ற தலைவர்களை மக்கள் மதிக்கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். ஆனால் மோடியை பார்த்தாலே பயப்படுகிறார்கள். மேற்கு வங்காளத்தில் கால் பதிக்கலாம் என்ற மோடியின் பகல் கனவு பலிக்காது என்று கூறினார்.

மோடி பேச்சு- நாயுடு கண்டனம்
மோடியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஆந்திர முதலமைச்சர் ஜனநாயகத்தின் ஆன்மாவுக்குத் துரோகம் செய்து, அபத்தத்தின் உச்சத்தை மோடி தொட்டுள்ளார். அதன் எதிரொலியாகத்தான், பிரதமர் தன்னிடம் 40 திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்புகொண்டதாகக் கூறியுள்ளார் என்று கண்டித்துள்ளார்.

பாஜகவின் குதிரை பேரம்
மோடியின் இந்த பேச்சுக்கு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் நாட்டு மக்கள் அனைவரும் பிரதமர் கூறிய கருத்தை கேட்டீர்களா? 130 கோடி மக்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்த மோடி, தற்போது சட்டவிரோதமாக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதிலிருந்து அவருடைய உண்மையான முகம் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இத்தகைய அவமானகரமான கருத்தைக் கூறியதற்காக, மோடிக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் அல்ல; 72 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க அங்குள்ள எம்.எல்.ஏக்கள் 7 பேருக்கு ரூ. 10 கோடி கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய மணிஷ் சிசோடியா வளர்ச்சி அரசியல் பற்றி பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் அவர் செய்வது வளர்ச்சி அரசியல் அல்ல. மற்ற கட்சிகளை உடைக்கும் செயலில் பாஜக தொடர்ந்து ஈடுபடுகிறது. டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி 7 எம்எல்ஏக்களை தலா 10 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருகிறது.

தக்க பாடம்
இதற்கு முன்பும் இதுபோன்ற முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டபோது மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டினார்கள். இந்த தேர்தலிலும் அவர்களுக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்று மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். இந்த நிலையில் கர்நாடகவில் காங்கிரஸ் மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா தலைமையிலான பாஜக முயன்றதும், தற்போது முயன்று வருவதும் குறிப்பிட தக்கது.
தேர்தல் நெருங்க நெருங்க இந்த குதிரை பேரம் இன்னும் உக்கிரமாகும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications