"தீவிரவாதத்தை ஒரு தொழிலாகவே வைத்திருந்த நாடு பாகிஸ்தான்".. மீள்வது சிரமம்.. ஜெய்சங்கர் ஓபன் அட்டாக்
"பாகிஸ்தானை பொறுத்தவரை, புத்திசாலித்தனமான பொருளாதாரக் கொள்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், தீவிரவாதத்தை ஒரு தொழிற்கூடமாகவே பாகிஸ்தான் வைத்திருக்கிறது"
டெல்லி: தீவிரவாதத்தை ஒரு தொழிற்கூடமாகவே வைத்திருந்த பாகிஸ்தானால், தற்போதைய இக்கட்டான பொருளாதார சூழலில் இருந்து வெளிவருவது கடினம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மேலும் இன்றைக்கு பாகிஸ்தானை சூழ்ந்திருக்கும் இருளுக்கு, முழுக்க முழுக்க அந்நாடும், அது மேற்கொண்ட நடவடிக்கைகளுமே காரணம் என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற ஆசிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்று பேசிய ஜெய்சங்கர், பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

திவாலான பாகிஸ்தான்
கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர வெள்ளம், தவறான பொருளாதாரக் கொள்கை, வரைமுறையில்லாமல் வாங்கிய கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் இன்றைக்கு மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணியும், கஜானாவும் மொத்தமாக காலியானதால் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் திவாலானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

உணவுக்கு அடித்துக்கொள்ளும் மக்கள்
நிதிப் பற்றாகுறையால் வெளிநாடுகளில் இருந்து உணவுப்பொருட்களை வாங்க கூட பணம் இல்லாத நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இதனால் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இப்போதைய சூழலில், பாகிஸ்தானில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தால் இரு வேளை உணவு உண்பதே கடினமானதாக மாறிவிட்டது. இதன் காரணமாக, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களை வாங்க மக்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள்.

"பாகிஸ்தானே காரணம்"..
இந்நிலையில், டெல்லியில் ஆசிய பொருளாதார மாநாடு நேற்று நடைபெற்றது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள், நிதி அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். அப்போது, பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், "பாகிஸ்தானுக்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் நிலைக்கு முழுக்க முழுக்க அந்நாடுதான் காரணம்.

"தீவிரவாத தொழில்"..
பாகிஸ்தானை பொறுத்தவரை, புத்திசாலித்தனமான பொருளாதாரக் கொள்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், தீவிரவாதத்தை ஒரு தொழிற்கூடமாகவே பாகிஸ்தான் வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நாட்டால், இதுபோன்ற கடினமான சூழலில் இருந்து வெளிவருவது கடினம். மேலும், ஒரு வளமான நாடாகவும் பாகிஸ்தானால் மாற முடியாது. இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா உதவாதா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. அதற்கு முன்பு இந்திய மக்களின் உணர்வை நான் அறிந்துகொள்ள வேண்டும்" என ஜெய்சங்கர் கூறினார்.












Click it and Unblock the Notifications