மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... உலகளாவிய 2வது கொரோனா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் மோடி
இன்று காணொலிக்காட்சி வழியாக நடக்கிற உலகளாவிய 2வது கொரோனா உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி அழைப்பின்பேரில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
டெல்லி: உலகளாவிய 2வது கொரோனா உச்சி மாநாடு இன்று காணொலிக்காட்சி வழியாக நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன்அழைப்பின்பேரில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மாநாட்டின் தொடக்கத்தில், 'தொற்று நோய் சோர்வைத் தடுத்தலும், தயார் நிலையில் முன்னுரிமை அளித்தலும்' என்ற தலைப்பில் நடைபெறுகிற அமர்வில் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, உலகமெங்கும் பரவியுள்ளது. 52 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 62 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.

பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் செலுத்திக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இதை தடுக்கவும் கொரோனா அலைகளில் இருந்து தப்பிக்கவும் உலக சுகாதார அமைப்பு பல்வேறு யோசனைகளைக் கூறி வருகிறது.
இந்த நிலையில் கொரோனா நிலைமை பற்றி விவாதிக்க 2-வது கொரோனா உச்சி மாநாடு இன்று காணொலிக்காட்சி வழியாக நடக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அழைப்பின்பேரில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தொடக்க அமர்வு மாலை 6.30 மணி முதல் 7.45 மணி வரை நேரடியாக ஒளிபரப்பாகிறது.
இந்த உலகளாவிய 2 வது கொரோனா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டின் தொடக்கத்தில், 'தொற்று நோய் சோர்வைத் தடுத்தலும், தயார் நிலையில் முன்னுரிமை அளித்தலும்' என்ற தலைப்பில் நடைபெறுகிற அமர்வில் பிரதமர் மோடி பேசுகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்திய உலகளாவிய முதல் கொரோனா உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கண்ணுக்குத் தெரியாத கிருமியான கொரோனா உடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே போரிட்டு வருகிறது. கொரோனாவிற்கு எதிரான உலகளாவிய போரில், மலிவு விலை தடுப்பூசிகள், மருந்துகள், பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான குறைந்த கட்டண உள்நாட்டு தொழில் நுட்பங்களை உருவாக்குதல், மரபணு கண்காணிப்பு, சுகாதார பணியாளர்களுக்கான திறன் மேம்பாடு என பல விதங்களில் இந்தியா முக்கிய பங்களிப்பை செய்து வருகிறது. தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி இயக்கம் காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications