அதிர்ச்சி.. பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா.. வெளியான அறிவிப்பு
டெல்லி: பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு அதி தீவிரமாக பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா பரவியுள்ள தகவலை பிரஸ் இன்பர்மேஷன் பீரோ என்ற மத்திய அரசின் செய்தி விளம்பரத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாதிக்கப்பட்ட 6 பேரில், 3 பேருக்கு பெங்களூர் நிமான்ஸ் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் இரண்டு பேருக்கு ஹைதராபாத்திலும், மற்றொன்று புனே ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அந்தந்த மாநில அரசுகள் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு தனி அறைகளில் வைத்து கண்காணித்து வருகிறார்கள்.
நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதிவரை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 33 ஆயிரம் பேர் திரும்பியுள்ளனர். பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களிடம் இருந்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

116 பேருக்கு பாதிப்பு
அதில் 116 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. ஆனால், அதில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா இருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்காக மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. விவரங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க பரவியுள்ளதா
பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது என்றால் அது கர்நாடகாவில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரியாக இருக்கக்கூடும். அல்லது தென் மாநிலங்களில் எங்கிருந்தாவது அனுப்பப்பட்ட மாதிரியாக இருக்க கூடும் என்று தெரிகிறது. எனவே உருமாறிய கொரோனா தென் மாநிலங்களிலும் வந்துவிட்டதா என்று பரபரப்பு நிலவுகிறது.

வேகமாக பரவும்
இருப்பினும், அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நோயாளிகள் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இல்லை. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் 70% வேகமாக பரவுவதாக இங்கிலாந்து அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. எனவேதான் உரு மாற்றம் என்பது வைரஸ் தொடர்பான வியாதிகளில் சகஜம் என்றாலும் இந்த உருமாற்றம் குறித்து, அதிக அச்சம் ஏற்படுகிறது.

முகக் கவசம் அவசியம்
எந்தவகையான கொரோனாவாக இருந்தாலும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை பராமரித்தால் போதும், உருமாறிய கொரோனாவாக இருந்தாலும் பரவாமல் தடுக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்திருந்தார். ஒருவேளை இது வேகமாக பரவினால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவரும் என்ற அச்சம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications