தடுப்பூசி பணிகள் மந்தம்.. காரணம் பற்றாக்குறை இல்லை, ஊரடங்கு கட்டுப்பாடுகள்... சமாளிக்கும் அதிகாரிகள்
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளின் வேகம் குறைய, பல பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தான காரணம் என்றும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பல மாநிலங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன,

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் வேகமும் குறைந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஏப்ரல் 3-9 தேதிகளில் 2.48 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இருப்பினும், அதன் பின்னர் ஏப்ரல் 10-16 வரை 2.07 கோடி பேர் ஏப்ரல் 17-23 வரை 1.7 கோடி பேர், ஏப்ரல் 24-30 வரை 1.48 கோடி பேர் எனத் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் வேகம் குறைந்து கொண்டே வருகிறது.
கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாகவே தடுப்பூசி பணிகள் குறைந்துள்ளதாக வெளியான தகவலை மத்திய அரசு அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். நாட்டின் பல மாநிலங்களிலும் கொரோனா பரவல் காரணமாகக் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர். இதன் காரணமாகவே கொரோனா தடுப்பூசி பணிகள் வேகம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சில மாநிலங்கள் தேவையான இடங்களுக்கு போதிய கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்காததும் இதற்கான முக்கிய காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
நகப்புறங்களில் கொரோனா தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் இருப்பினும் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அப்பகுதிகளில் தடுப்பூசி ஒதுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications