கவலைபடதீங்க... நாங்க கொரோனாவை கட்டுப்படுத்திடோம்... நம்பிக்கை தரும் ஹர்ஷ் வர்தன்
டெல்லி: நாட்டில் ஐந்தின் ஒரு பங்கு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோன பரவல் தொடர்ந்து அதிகரித்தது.
இதையடுத்து மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், செப்டம்பர் மாதம் வரையிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. அதன் பின்னரே கொரோனா பரவல் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
கட்டுப்படுத்தி விட்டோம்
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "கொரோனா வைரசை இந்தியா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 12 ஆயிரம் பேருக்கு மட்டும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார். இந்தியாவின் சில பகுதிகளில் ஹெர்ட் இம்மியூனிட்டி எனப்படும் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியும் உருவாகியுள்ளதாக சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
146 மாவட்டங்களில் கொரோனா இல்லை
தொடர்ந்து ஹர்ஷ் வர்தன் பேசுகையில், "நாட்டிலுள்ள 718 மாவட்டங்களில் சுமார் 146 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேபோல 18 மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரமாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இந்திய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திவிட்டது" என்றார்.
கொரோனா பரவலை தடுக்கும் வழி
ஒரு நாட்டிலுள்ள மொத்த மக்கள்தொகையில் 60 முதல் 70% மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தினால், அந்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துவதன் மூலமும் ஹெர்ட் இம்மியூனிட்டி மூலமும் இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் தடுக்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
கொரோனா பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல இந்தியாவில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. வரும் ஜூலை - ஆகஸ்ட் மாத்திற்குள் 30 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சீரோ சர்வேகளில் இந்தியாவிலுள்ள 55% மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..