ரூ.225க்கு கொரோனா வேக்சின்.. சீரம் நிறுவனத்திற்கு 150 மில்லியன் டாலர் உதவும் பில்கேட்ஸ்.. அசத்தல்
டெல்லி: கொரோனா தடுப்பு மருந்தை வெறும் 225 ரூபாய்க்கு மக்களுக்கு விற்கும் வகையில் இந்தியாவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு பில் கேட்சின் தொண்டு நிறுவனம் சார்பாக 150 மில்லியன் டாலர் உதவி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா தடுப்பு மருந்து வேகமாக சோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அதிக கவனம் ஈர்த்து இருக்கிறது. இந்த சீரம் நிறுவனம்தான் உலகின் இரண்டு முக்கியமான கொரோனா மருந்துகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனம்தான் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா. இதனால் உலக நாடுகள் தற்போது கொரோனா தடுப்பு மருந்து உற்பத்திக்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவை சார்ந்துள்ளது.

இந்தியா எப்படி
கொரோனா தடுப்பூசி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தற்போது வெற்றிபெற்றுள்ளது. ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. ஆஸ்டெராசெனெகா நிறுவனம் உடன் இணைந்து இந்தியாவில் இந்த தடுப்பு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிக்கிறது.

சீரம் ஒப்பந்தம்
அதேபோல் இன்னொரு பக்கம் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபட்டு வரும் நோவாவேக்ஸ் நிறுவனம் உடனும் சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகம் முழுக்க இந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம்தான் கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய போகிறது. இதற்காக தற்போது சீரம் நிறுவனத்திற்கு பில் கேட்ஸ் மூலம் ''தி பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் '' நிறுவனம் சார்பாக 150 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

வேகம் முக்கியம்
ஆஸ்டெராசெனெகா மற்றும் நோவாவேக்ஸ் தடுப்பு மருந்துகளை சீரம் நிறுவனம் வேகமாக உருவாக்கும் வகையில் இந்த நிதி உதவியை பில் கேட்ஸ் செய்து இருக்கிறார். இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி மொத்தம் 100 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை முதல் கட்டமாக சீரம் நிறுவனம் உருவாக்க வேண்டும். இதை இந்திய மதிப்பில் 225 ரூபாய்க்கு விற்க வேண்டும்.

எங்கு எல்லாம்
இந்தியா மற்றுமின்றி மற்ற நடுத்தர , ஏழை நாடுகளுக்கும் இதே விலையில் விற்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் தலைமையில் இயங்கி வரும் GAVI, The Vaccine Alliance எனப்படும் குழு மூலமாக இந்த 150 மில்லியன் பணம் வழங்கப்படுகிறது. உலகம் முழுக்க அனைத்து நாடுகளுக்கும் மருந்துகள் கிடைக்கும் வகையில் இந்த குழு உருவாக்கப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பு மருந்தை வழங்குவதற்காக இந்த GAVI குழு COVAX mechanism என்ற முறையை உருவாக்கி உள்ளது.

முறை எப்படி
இந்த COVAX mechanism படி சீரம் நிறுவனத்திற்கு தேவையான பொருளாதார உதவிகளை gavi செய்யும். இதன் மூலம் குறைந்த விலையில் சீரம் நிறுவனம் மருந்துகளை வேகமாக உற்பத்தி செய்ய வேண்டும். 2021 முதல் காலாண்டிற்குள் இந்த மருந்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் இந்த மெக்கானிசம். முக்கியமாக ஏழை நாடுகளுக்கு எளிதாக மருந்து கிடைக்க இதன் மூலம் வழி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.

நிதி திரட்டி உள்ளது
முதல் கட்டமாக 2 பில்லியன் டாலர் நிதியை திரட்டும் எண்ணத்தில் gavi அமைப்பு உள்ளது. இதன் மூலம் ஆக்ஸ்போர்ட் மருந்து அமலுக்கு வந்தால் 57 நாடுகளுக்கு இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் இருந்து மருந்து ஏற்றுமதி செய்யப்படும். நோவாவேக்ஸ் மருந்து அமலுக்கு வந்தால் 92 நாடுகளுக்கு சீரம் நிறுவனம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும். ஏற்கனவே சீரம் நிறுவனம் தனது உற்பத்தி திறனை பெருக்கும் வகையில் புதிய தொழிற்சாலை கட்டுவதற்காக 100 மில்லியன் டாலரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications