நாளை முதல் விநியோகம்... மிக விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்... ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீட்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டிற்கு கடந்த வாரம்ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தடுப்பூசி ஒத்திகையும் கடந்த வாரம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டதால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிக விரைவில் தடுப்பூசி
இந்நிலையில், இந்தியாவில் மிக விரைவில் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி விநியோகம் எவ்வித தடையுமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.

முதலில் யாருக்கு
பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ள வல்லுநர் குழு பரிந்துரைப்படி முதலில் யாருக்குத் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முதல்கட்டமாக நாடு முழுவதும் இருக்கும் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அதன் பின் இரண்டாம் கட்டமாக 50 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போலி செய்திகள்
கொரோனா தடுப்பூசி குறித்து பல்வேறு போலி செய்திகள் இணையத்தில் பரவுகிறது. இது தடுப்பூசி குறித்து அச்சத்தை மக்களிடையே அதிகரிக்கிறது. இது குறித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர். போலி செய்திகள் காரணமாக கொரோனா பரவலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் போலி செய்திகள் பரவுவதைத் தடுக்கவும் உண்மையான செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

மீண்டும் அதிகரிப்பு
மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே மீண்டும் அதிகரித்துள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே இது உள்ளதாக ஹர்ஷ் வர்தன் கூறினார்.

தடுப்பூசி ஒத்திகை
தடுப்பூசி ஒத்திகையின்போது பல்வேறு மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டிலுள்ள 33 மாநிலங்களிலும் யுனியன் பிரதேசங்களிலும் நாளை மீண்டும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி விநியோகம்
நாளை முதல் நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனேவில் இருந்து நாடு முழுவதும் விமானங்கள் மூலம் தடுப்பூசி எடுத்துச் செல்லப்பட உள்ளது. வட இந்தியாவில் டெல்லி மற்றும் கர்னல் ஆகிய நகரங்களில் மினி ஹப்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல கிழக்கு இந்தியாவுக்குக் கொல்கத்தா மற்றும் குவஹாத்தி ஆகிய நகரங்களும் தென்னிந்தியாவுக்குச் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் மினி ஹப்களாக செயல்படும்.












Click it and Unblock the Notifications