கோவிஷீல்டு தடுப்பூசிகளால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படலாம்.. பிரிட்டன் மருத்துவர் அசீம் எச்சரிக்கை
"தங்கள் பங்குதாரர்களுக்கு லாபம் ஈட்டி தருவதே மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அக்கறை அந்நிறுவனங்களுக்கு கிடையாது"
டெல்லி: மற்ற கொரோனா தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மிகவும் ஆபத்தானவை என்று பிரிட்டன் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா எச்சரித்துள்ளார்.
இந்த தடுப்பூசியால் இதயம் மற்றும் ரத்தநாளங்கள் தொடர்பான பாதிப்புகள், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மருந்து நிறுவனங்கள் எவற்றுக்கும் மக்கள் மீது அக்கறை கிடையாது என்றும், லாபம் ஈட்டுவது மட்டுமே முதன்மை குறிக்கோளாக இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

ஆபத்தானவையா கொரோனா தடுப்பூசிகள்?
கொரோனா பெருந்தொற்றில் இருந்து மனிதர்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மீது ஆரம்பத்தில் இருந்தே சில சந்தேகங்களும், அச்சங்களும் மக்கள் மத்தியில் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. இப்போதும் அது நீங்கவில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சிலர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தனர். பிரபலங்களும் இதில் அடங்குவர். இதுவே இந்த அச்சம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது. எனினும், மாரடைப்புக்கும், கொரோனா தடுப்பூசிகளுக்கும் காரணம் அல்ல என அரசாங்கங்களும், மருத்துவர்களும் தெரிவித்தனர். இதனால் மக்களும் அந்த தடுப்பூசிகளை இரு தவணைகளாக செலுத்திக் கொண்டனர்.

பிரிட்டன் மருத்துவர் எச்சரிக்கை
இந்தியாவை பொறுத்தவரை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், அமெரிக்காவின் கோவிஷீல்டு தடுப்பூசியுமே பிரதானமாக மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சில நாட்கள், மாதங்களுக்கு பிறகு ஆங்காங்கே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். ஆனால், இது இயற்கையான நிகழ்வு என்றும், தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கும் சம்பந்தமில்லை எனவும் அரசாங்கம் கூறியது. இந்த சூழலில்தான், பிரிட்டன் இதய நோய் சிறப்பு மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா, கொரோனா தடுப்பூசிகள் குறித்து பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

"இதயம், ரத்த நாளங்களில் பாதிப்பு"
இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் பிரிட்டன் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா. கொரோனாவுக்கு எதிரான எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் (மரபணு தடுப்பூசிகள்), மனிதர்களுக்கு ஆபத்தானவை என ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்து வரும் வல்லுநர்களில் இவரும் ஒருவர். இதனிடையே, இந்தியா வந்துள்ள இவர், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது: அமெரிக்காவின் ஃபைஸர், மாடர்னா நிறுவனங்கள் தயாரிக்கும் எம்ஆர்என்ஏ (MRNA) தடுப்பூசிகள் உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் இவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

"கோவிஷீல்டு தடுப்பூசி மிக மோசம்"
கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், மற்ற எம்ஆர்என்ஏ கொரோனா தடுப்பூசிகளையும், கோவிஷீல்டு தடுப்பூசியையும் விஞ்ஞானிகள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். இதன் முடிவுகள் ஆய்விதழ் ஒன்றில் வெளியானது. அதில், மற்ற தடுப்பூசிகளை விட கோவிஷீல்டு தடுப்பூசி மிக மோசமானவை என தெரியவந்தது. அதாவது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம், இளவயதினருக்கும், முதியவர்களுக்கும் ரத்தம் உறைவது, சில உயிரிழப்புகளை ஏற்படுத்துவது என ஃபைஸர் நிறுவனத்தின் எம்ஆர்என்ஏ தடுப்பூசியை விட கோவிஷீல்டு தடுப்பூசி மிக மோசமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி நிறுத்தம்
பிரிட்டனில் 97 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், கிட்டத்தட்ட 10 சதவீதம் பேருக்கு, அதாவது 8 லட்சம் பேருக்கு மிக மோசமான பக்கவிளைவுகள் ஏற்பட்டன. முன்னெப்போதும் இதுபோல நாங்கள் பார்த்ததில்லை. இதன் காரணமாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. அப்படி இருக்கும் போது, இந்தியாவில் மட்டும் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்படுவது ஏன்? இந்தியாவின் இந்த தடுப்பூசியின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அந்த தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

"லாபம் ஈட்டுவதே நோக்கம்"
இந்த விவகாரத்தில் முக்கியமான விஷயத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் பங்குதாரர்களுக்கு லாபம் ஈட்டி தருவதே மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அக்கறை அந்நிறுவனங்களுக்கு கிடையாது. கோவேக்சின் தடுப்பூசி தரவுகளை ஆய்வு செய்ததில், அந்த தடுப்பூசியால் குறிப்பிடும்படியான பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது. அந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது போலவே தெரிகிறது. எனினும், மற்ற தடுப்பூசிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் நிலையில், கோவேக்சினையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மேலும் மேலும் தடுப்பூசி தவணைகளை செலுத்திக்கொள்ளும் போது, கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா கூறினார்.












Click it and Unblock the Notifications