"பிரதமர் மோடி செயல் கோழைத்தனமானது.." இந்திய சீனா எல்லை விவகாரம்! காங்கிரஸ் சரமாரி அட்டாக்! என்னாச்சு
டெல்லி: இந்தியா சீனா எல்லை மோதல் தொடர்பாகப் பிரதமர் மோடி சில கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், அதற்குக் காங்கிரஸ் மிகக் கடுமையான எதிர்வினையாற்றி உள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் செய்தி நிறுவனமான நியூஸ் வீக் தளத்தில் பிரதமர் மோடியின் நேர்காணல் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு இருந்தார்.

பிரதமர் மோடி: குறிப்பாக இந்தியா சீனா மோதல் குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து இருந்தார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலையான உறவுக்கு அழைப்பு விடுத்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார்.
இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள கருத்துக்குக் காங்கிரஸ் கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளது. பிரதமர் மோடி கோழைத்தனமான இருப்பதாகவும், அவரது பதில் பலவீனமானது மற்றும் பயனற்றது என்றும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்: இது தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "நியூஸ் வீக் என்ற அமெரிக்கப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மிகவும் கோழைத்தனமாக இருந்துள்ளார். இந்திய இறையாண்மையில் சீனாவின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் குறித்து அவர் கூறிய ஒரே கருத்து என்ன தெரியுமா.. இந்தியா-சீனா எல்லையில் உள்ள பிரச்சினையை இருதரப்பு உடனடியாக தீர்க்க வேண்டும் என்று மட்டும் கூறியிருக்கிறார்.
சீனாவுக்கு ஒரு வலிமையான மெசேஜ் அனுப்பும் வாய்ப்பு பிரதமருக்குக் கிடைத்தது. இருப்பினும், அவர் பயனற்ற மற்றும் பலவீனமான பதிலைக் கொடுத்துள்ளார். இது இந்திய நிலப்பரப்பில் சீனாவின் அத்துமீறலை மேலும் ஊக்குவிக்கும். பிரதமர் மோடியின் கருத்து "அவமானம்" மட்டுமல்ல.. இந்தியா-சீனா எல்லையைப் பாதுகாக்கும் போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அவமரியாதை செய்வது போன்றதாகும்.
மன்னிப்பு கேட்கணும்: 2020 ஜூன் மாதம் இந்தியாவுக்குள் யாரும் நுழையவில்லை என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இதற்காக அவர் 140 கோடி இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அன்றைய தினம் நாட்டு மக்களிடம் பேசிய அவர் யாரும் இந்தியாவிற்குள் நுழையவில்லை. எந்த பகுதியிலும் இல்லை என்று கூறியிருந்தார். சீனாவுடனான எல்லைகளைப் பாதுகாப்பதில் அவர் தோல்வியடைந்துள்ளார். அது குறித்து தேசத்தை இருளில் வைத்துள்ளார்" என்று சரமாரியாகச் சாடியுள்ளார்.
நியூஸ் வீக் செய்தி நிறுவனத்திற்குப் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், "தூதரக மற்றும் ராணுவ மட்டங்களில் பாசிடிவ் மற்றும் ஆக்கப்பூர்வமான இருதரப்பு பேச்சுவார்த்தை தேவை. அப்போது தான் இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லைகளில் அமைதியை மீட்டெடுக்கவும் பராமரிக்கவும் முடியும்" என்று கூறியிருந்தார்.
இந்தியா சீனா மோதல்: பல ஆண்டுகளாக இந்தியா சீனா இடையே எல்லையில் நல்லுறவு இருந்ததே இல்லை. அதிலும் குறிப்பாக 2020ல் நடந்த கல்வான் மோதலை தொடர்ந்து கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பகுதிகளில் சில மோதல் சம்பவங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு தொடர்ந்து அங்கு ஒரு பதற்றமான சூழலே நிலவி வருகிறது. அதன் பிறகு இந்தியாவும் எல்லையில் அதிகப்படியான ராணுவத்தைக் குவித்தது.
அங்கு நிலவும் பதற்றத்தைக் குறைக்கத் தூதரக மற்றும் உயர்மட்ட ராணுவ ரீதியான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதனால் எல்லையில் சற்று நிலைமை முன்னேறினாலும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications