"மண்டை காய வைக்கிறது" தெரியுமா? 'இந்தியா' அணி குறித்த சிபிஎம் நிலைப்பாட்டை படிங்க.. 'தானா' புரியும்!
டெல்லி: "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாக கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் "ஒருங்கிணைப்பு' குழுவில் இடம்பெறாது என்று அறிவித்துள்ளது. அத்துடன் குழப்பமான சில நிலைப்பாடுகளையும் அறிவித்து "இந்தியா' கூட்டணி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட "இந்தியா' கூட்டணிக்கு இப்போது சோதனை காலம் போல. சனாதன ஒழிப்பு என்ற திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சால் "இந்தியா' அணியில் மாறுபட்ட கருத்துகள் பகிரங்கமாக வெளிப்பட்டன. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் 'இந்தியா' கூட்டணிக்குள் குழப்ப குருமா வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) அறிவித்துள்ள அதிரி புதிரியான நிலைப்பாடுகளால் மண்டை காய்ந்து போயிருக்கின்றனர் அந்த அணியின் மூத்த தலைவர்கள்.
சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் சுஜன் சக்கரவர்த்தி நேற்று தெரிவித்த மூன்றுவிதமான நிலைப்பாடுகள் இதுதான்... 1) "இந்தியா" கூட்டணியை தேசிய அளவில் வலுப்படுத்த ஒத்துழைப்போம் 2) ஆனால் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற மாட்டோம் 3) "இந்தியா" கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸை எதிர்ப்போம்.
திரிணாமுல் காங்கிரஸை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கு சுஜன் சக்கரவர்த்தி கூறியதாவது: பாஜகவையும் மதவாத சக்திகளையும் சமரசமின்றி நாடு முழுவதும் எதிர்க்கிறோம். அதேபோல பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்திருக்கிற மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸையும் எதிர்க்கிறோம். தங்களது கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் மறைமுக உடன்பாடு வைத்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ். இப்படித்தான் சுஜன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
சிபிஎம்-ன் இந்த நிலைப்பாடு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறியதாவது: பாஜகவுக்கு எதிராக ஒத்த கருத்துள்ள அத்தனை கட்சிகளு ஒன்று சேர வேண்டும் என்பது அழைப்பது இடதுசாரிகள்தான். இப்படியான ஒரு நிலைப்பாடு எடுத்தால் அந்த அழைப்புக்கு என்னதான் அர்த்தம். இவ்வாறு அபிஷேக் பானர்ஜி கூறினார்.












Click it and Unblock the Notifications