சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடம்.. செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை!
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செயற்கை சுவாச உதவியுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீதாராம் யெச்சூரியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரியின் வயது 72 ஆகும். சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மாணவ பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் சீதாராம் யெச்சூரி மேற்கு வங்க மாநிலத்தில் பல முறை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 19 ஆம் தேதி அவருக்கு தீவிர காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீதாராம் யெச்சூரி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications