மிடில் கிளாஸ் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீட்டு வசதி திட்டம் அடுத்த வருடம் வரை நீட்டிப்பு- நிர்மலா
டெல்லி: நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்கான மானிய கடன் வீட்டு வசதி திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்றும், இதற்காக 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி பேக்கேஜ் தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மாலை தொடர்ந்து இரண்டாவது நாளாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுக்கு குறைந்தபட்சம் 6 லட்சம் முதல் அதிகபட்சம் 18 லட்சம் வரையிலான வருமானம் பெறும் பிரிவினர் நடுத்தர வர்க்கத்து மக்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் வறுமைக் கோட்டை தாண்டி இருக்கலாம், ஆனாலும் அதிகமாக செலவிட முடியாத பிரிவினர் என்று கருதப்படுகிறார்கள்.
இவர்களுக்காக மானிய விலையில் கடன் வசதி மூலம் வீடு கட்டும் திட்டம், 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் அந்த திட்டம் நிறைவடைந்தது. இதுவரை இந்த திட்டத்தால் 3 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்கள் பலன் பெற்றுள்ளனர்.
இந்த மானிய கடன் வீட்டு வசதி திட்டம், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும். அதாவது கூடுதலாக ஓராண்டுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படும். இதனால் மேலும் 2 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பலன் பெறுவார்கள்.
அதுமட்டுமின்றி, கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் வேலை வாய்ப்பு பெருகும், சிமெண்ட், செங்கல், பெயிண்ட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உடனடியாக வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சரக்கு போக்குவரத்தும் அதிகரிப்பதால் பல துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இதனால் பலன் கிடைக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications