லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமீபத்திய நாட்களாக பிரதமர் நரேந்திர மோடியை எந்த பிரசாரத்திலும் பார்க்க முடியவில்லை. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும், 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது. எனவே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், சமீப நாட்களாக எந்த பிரசார கூட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகியவை ஏப்ரல் 19ம் தேதி தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்த மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரே கட்டமாக ஏப்.19ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 19 ஏப்ரல் தொடங்கி மே 20ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆக இன்னும் 20 நாட்களில் தேர்தல் தொடங்க இருக்கிறது. இருப்பினும் பிரதமர் மோடியை பிரசார மேடைகளில் பார்க்க முடியவில்லை.
சமீபத்தில் அவர் பூட்டான் நாட்டிற்கு சென்றிருந்தார். இருப்பினும் கடந்த 23ம் தேதியே அவர் திரும்ப வந்துவிட்டாலும் இன்றும் பிரசாரங்களில் பங்கெடுக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. முதல் காரணம் கருத்துக்கணிப்புகள்தான். ஏப்.19ம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் பாஜகவுக்காவுக்கு பெரிய அளவில் சீட் கிடைக்காது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணிதான் கிளீன் ஸ்வீப் செய்யும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல மகாராஷ்டிராவில், சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்ரே அணி பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே, இதற்கான தேர்தல் வியூகங்களை வகுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் கூட மோடியின் பிரசாரத்தை தள்ளி போட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அதேநேரம், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை எடுத்துக்கொண்டால் பாஜக இங்கு பலமாக இருக்கிறது. இருப்பினும் கடந்த முறை வென்ற தொகுதிகளை விட ஓரிரு தொகுதிகள் குறைவாகவே இந்த முறை பாஜகவுக்கு கிடைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். எனவே மோடியின் கனவான '370 தொகுதிகளில் வெற்றி'க்கான சாத்தியம் குறைவு என்பதையும் தெளிவுப்படுத்தி வருகின்றனர்.
இது தவிர, தேர்தல் பத்திரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சிஏஏ அமல்படுத்தப்பட்டது, ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் கைது, மணிப்பூர் கலவரம், காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் பாஜகவின் வாக்குகளை சிதறடிக்கும் காரணிகளாக இருக்கிறது. எனவே, இதற்கு எதிரான சரியான தேர்தல் யுக்தியுடன் களமிறக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. எனவேதான் பிரசாரத்திற்கு தாமதமாகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications