ரெண்டே வாரங்கள்தான்.. 122 பேருக்கு பாதிப்பு.. கொரோனா பரப்பும் மையமான டெல்லி சிஆர்பிஎஃப் பட்டாலியன்
டெல்லி: டெல்லியில் கடந்த இரு வாரங்களில் 122 படைவீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் சிஆர்பிஎஃப் பட்டாலியன் படை கொரோனா பரப்பும் மையமாக மாறியுள்ளது கவலையை அளிக்கிறது.
கிழக்கு டெல்லியில் மயூர் விகார் நிலை 3-இல் துணை ராணுவ படையின் (சிஆர்பிஎஃப்) 31 ஆவது பட்டாலியன் படை உள்ளது. இங்கு கடந்த சில நாட்களில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதுவரை 122 படைவீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
மேலும் 100 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. டெல்லியில் கடந்த வாரம் அஸ்ஸாம் பட்டாலியனைச் சேர்ந்த 55 வயது படைவீரர் ஒருவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

சோதனை
டெல்லியில் உள்ள அந்த குறிப்பிட்ட பட்டாலியனில் மேற்கொண்ட கொரோனா சோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சில நாட்கள் கழித்து அந்த பட்டாலியனில் இருந்த 45 வீரர்களுக்கும் நோய் பரவியது. இவர்களுக்கு சிஆர்பிஎஃப் படையில் செவிலிய உதவியாளர் பிரிவில் பணியாற்றி வந்த ஒருவரிடம் இருந்து கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிஆர்பிஎஃப் படைவீரர்கள்
அந்த நபருக்கு கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கொரோனா அறிகுறிகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 24-ஆம் தேதி 9 சிஆர்பிஎஃப் படை வீரர்களுக்கு கொரோனா உறுதியானது.

122 பேருக்கு கொரோனா
இதற்கடுத்த நாளே 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இப்படியாக கடந்த இரு வாரங்களில் கொரோனாவால் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பட்டாலியன் படை கொரோனா பரப்பும் மையமாக மாறிவிட்டது.

விளக்கம்
இதுகுறித்து கவனத்தில் கொண்ட உள்துறை அமைச்சகம் நோய் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த முடியாதது குறித்து விளக்கமளிக்குமாறு சிஆர்பிஎஃப் படையின் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 37 ஆயிரமாக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications