இந்தியாவில் வரும் டிஜிட்டல் கரன்சி.. "வங்கி ரூபாய்" வரையறைக்குள் கொண்டு வர திட்டம் -ஆர்பிஐ பரிந்துரை
டெல்லி: ஆர்பிஐ கொண்டு வர இருக்கும் டிஜிட்டல் கரன்சியை "வங்கி ரூபாய்" என்ற வரையறைக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவில் நாம் புழங்கும் ரூபாய் நோட்டுகளுக்கு இருக்கும் அதே ரிசர்வ் வங்கியின் அனுமதி, மதிப்பு அவர்கள் கொண்டு வரும் டிஜிட்டல் கரன்சிக்கும் இருக்கும்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குப்படுத்த மத்திய அரசு மூலம் நடப்பு கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்ஸியை கட்டுப்படுத்தும் மசோதா, The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021, என்ற பெயரில் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த மசோதா எப்படி இருக்கும் என்பதில் இன்னும் நிறைய குழப்பங்கள் உள்ளன. ஆனால் இதன் மூலம் தனியார் கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்படுகின்றன என்பது மட்டும் உறுதியாகிறது.

கிரிப்டோகரன்சி
அதன்படி தனியார் கிரிப்டோகரன்சிகளை மக்கள் இந்தியாவில் ஒரு பணமாக பயன்படுத்த முடியாது. டிஜிட்டலில் இருந்தாலும் இதை பணமாக பயன்படுத்த முடியாது. இதை மத்திய அரசு தடை செய்கிறது. தனியார் கிரிப்டோகரன்சியை வாங்குவதோ, விற்பதோ, அதில் முதலீடு செய்வதோ, அதை வைத்து பொருட்கள் வாங்குவதோ தடை செய்யப்படுகிறது. ஒரு சில கரன்சிகளுக்கு மட்டும் இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம்.

பணம்
கிரிப்டோகரன்சி தொழில்நுட்ப பயன்பாடு, அதில் ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்கு விலக்கு, வெளிநாடுகளில் அனுமதி அளிக்கப்பட்ட கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் வெளிநாட்டு பணம் என்ற அளவில் அனுமதி போன்ற சில விலக்குகள் மட்டும் அளிக்கப்படும். இதுதான் வரைவு மசோதாவில் உள்ளது. ஆனால் தாக்கல் செய்யப்படும் மசோதாவில் மாற்றங்கள் ஏற்படலாம். அதோடு ஆர்பிஐ மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட டிஜிட்டல் கரன்சி அதிகாரபூர்வமாக அறிமுகப்பட உள்ளது.

ஆர்பிஐ
இந்த நிலையில்தான் ஆர்பிஐ கொண்டு வர இருக்கும் இந்த டிஜிட்டல் கரன்சியை "வங்கி ரூபாய்" என்ற வரையறைக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் ரூபாய்க்கு இருக்கும் அதே மதிப்பு ஆர்பிஐ கொண்டு வரும் டிஜிட்டல் கரன்சிக்கு இருக்கும். உங்கள் பணம் அனைத்தையும் நீங்கள் டிஜிட்டலாக மாற்றி வைத்துக்கொள்ளலாம்.

கிரிப்டோ
இது கிரிப்டோ உலகிற்குள் வராது. பிளாக் செயின் உலகிற்குள்ளும் வராது. அதே சமயம் தனியாக இந்தியாவின் டிஜிட்டல் கரன்சியாக இருக்கும். இதன் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை எளிதாக கண்காணிக்க முடியும். இதற்காகத்தான் கடந்த அக்டோபரில் டிஜிட்டல் கரன்சிகளுக்கான மத்திய வங்கியை கொண்டுவர ஆர்பிஐ பரிந்துரை செய்தது.

ஆர்பிஐ பரிந்துரை
Central Bank Digital Currency எனப்படும் இந்த மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளை கண்காணிக்கும். இந்த வங்கி மூலமே நாம் நமது கையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு டிஜிட்டல் கரன்சியை வாங்க முடியும். இது பாதுகாப்பாக இருக்கும், வேகமாக இருக்கும், எளிதாக பணத்தை அனுப்ப, பெற முடியும் என்று ஆர்பிஐ தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி
அதேபோல் இன்னொரு பக்கம் பிட்காயினை இந்தியாவில் ஒரு கரன்சியாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பிட் காயினை தடை செய்வதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறவில்லை. மாறாக இதை நிகழ் பரிவர்த்தனைகளில் பயன்படுத்த முடியாது. பிட்காயின் கொடுத்து கார் வாங்க முடியாது. மாறாக இதில் முதலீடு செய்யவோ, மைனிங் செய்யவோ இதுவரை எந்த தடையும் விதிக்கப்படவில்லை. பில் வந்த பின்தான் தடை வருமா என்பது முழுமையாக தெரியும்.












Click it and Unblock the Notifications