சிடி ரவி பதவி பறிப்பு.. ஆனால் சர்பிரைஸ் காத்திருக்கு! அதிரடி காட்டும் பாஜக-கட்சி தலைகீழா மாறிடுச்சே
டெல்லி: தமிழ்நாடு பாஜக பொறுப்பாளரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமாக இருந்த சிடி ரவி உள்ளிட்டோரின் பதவி பறிக்கப்பட்ட தேசிய பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டசபைத் தேர்தல்கள், தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தல் போன்றவற்றுக்கான பணிகளில் பாரதிய ஜனதா கட்சி இப்போதே தயாராகி வருகிறது.

இதற்கான தேர்தல் வியூகங்கள், கூட்டணி வியூகங்களில் பாஜக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் தேர்தலுக்கு ஏற்ப பாஜக உட்கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன் படி தேர்தலை மனதில் வைத்து பாஜக தேசிய தலைமை பதவிகளில் மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறது.
அதன்படி 13 பாஜக தேசிய துணைத் தலைவர்கள், 9 பாஜக பொதுச் செயலாளர்கள், 13 தேசிய செயலாளர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவரும், பொறுப்பாளருமான பி.எல்.சந்தோஷ் கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக (AMU) முன்னாள் துணைவேந்தர் தாரிக் மன்சூர் பாஜக தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில முன்னாள் பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் அந்த கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த இந்திய பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அண்டனியின் மகனுமான அனில் ஆண்டனியும் பாஜகவின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்த சி.டி.ரவி மற்றும் திலிப் சாய்கியா ஆகியோர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். பீகாரை சேர்ந்த பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராதா மோகன் சிங், பாஜக துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
இதில் தமிழ்நாட்டுக்கு அறியப்பட்ட முகமான சிடி ரவி தமிழ்நாடு பாஜக பொறுப்பாளராகவும் இருந்தார். கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவர் கர்நாடக மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகவும், இதற்காகவே அவர் பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications