உயரப்போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம் இறக்குமதி வரி அதிகரிப்பு! வரியை தவிர்க்க ஒரு வழி இருக்கு
டெல்லி: தங்கம், பிளாட்டினத்திற்கு இணையாக வெள்ளி இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கலாகிறது. நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நேற்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் இரு அமர்வுகளாக வரும் ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.

பட்ஜெட்
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பு மோடி 2.o அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டு மொத்தம் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், மக்களைக் கவரும் வகையிலான பல திட்டங்கள் இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இந்தத் திட்டம் இருந்தது.

அதிகரிப்பு
அதேநேரம் சில பொருட்களுக்கான விலை ஏற்றம் இருக்கவே செய்கிறது. இதனிடையே தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று சமயத்தில் உயரத் தொடங்கியத் தங்கத்தின் விலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இது மேலும் விலை உயர்வுக்கே வித்திடும்.

தங்கம், வெள்ளி, வைரம்
ஜூலை 2022இல், இறக்குமதி வரியை 10.75 சதவீதத்திலிருந்து மத்திய அரசு 15 சதவீதமாக உயர்த்தியது. இதற்கிடையே இப்போது தங்க நகைகளின் வரி மேலும் அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் மட்டுமின்றி, வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவிர்க்க வழி
அதேநேரம் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரம் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கத்தை டிஜிட்டல் தங்கமாக மாற்றினால், மூலதன ஆதாயமோ, வரியோ இருக்காது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். எனவே, டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதன் மூலம் நம்மால் வரியைத் தவிர்க்க முடியும்.

உயரும்
இதேபோல வேறு சில பொருட்கள் மீதான வரி விதிகளிலும் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிகரெட் மீதான வரியை அதிகரிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலை உயரும். அதேபோல மின்சார சிம்னிக்களின் விலையும் உயர உள்ளது. மின்சார சிம்னிக்கு 15% வரி விதிக்கப்பட்ட நிலையில், அது 15% உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

குறையும்
அதேபோல உலக நாடுகளுடன் போட்டிப்போடும் வகையில் பல வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. தொலைப்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கேமரா லென்ஸ்கள் வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும், டிவி பேனல்கள், லித்தியம் அயன் பேட்டரிகள் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பொருட்களின் விலையும் கணிசமாகக் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications