குட் நியூஸ்.. ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளுக்குச் சுங்கவரி ரத்து.. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு
டெல்லி: ஆக்சிஜனை தயராகிக் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 3.32 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 25 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் தேவையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆக்சிஜனை தேவையை அதிகரிப்பது தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆக்சிஜன் தேவையை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சுங்க வரி ரத்து
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி மற்றும் சுகாதார செஸ் ஆகியவற்றை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மருத்துவமனைகளில் கொரோனோ நோயாளிகளுக்கு உதவும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஜெனரெட்டர்கள் உள்ளிட்டவற்றிற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த பொருட்களுக்கு சுங்க வரி வசூல் செய்யப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள்
அதேபோல தடுப்பு மருந்துகள், அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்கள் ஆகியவற்றுக்கும் சுங்க வரி வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவதாக ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டது. அவை மிக விரைவில் இறக்குமதி செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியை அதிகரிக்கலாம்
தலைநகர் டெல்லியிலியுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் ஒரு சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதாக மருத்துவமனைகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அதேபோல தடுப்பூசிகளுக்கும் நாட்டின் பல பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி விலக்கு உற்பத்தியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications